கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தின் 27-ஆம் ஆண்டு பிரதிஷ்டை தின விழா இன்று   கொண்டாடப்பட்டது. விழாவில் இந்து, பௌத்தம், சீக்கியம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் உள்ளிட்ட பல்வேறு மதங்களின் மந்திர உச்சாடனங்கள் மற்றும் பக்திப் பாடல்கள் தியானலிங்கத்தில் அர்ப்பணிக்கப்பட்டன.

சாதி, மத, இனம், பாலினம் உள்ளிட்ட எந்தப் பேதமும் இன்றி, தியானம் செய்ய விரும்பும் அனைவரும் தியானலிங்க கருவறைக்குள் அமர்ந்து தியானத்தில் ஈடுபட முடியும். இதை உணர்த்தும் விதமாக, பல்வேறு மதங்களின் சின்னங்களைத் தாங்கிய ‘சர்வதர்ம ஸ்தம்பம்’ என்ற தூண் தியானலிங்க நுழைவாயிலில் நிறுவப்பட்டுள்ளது.

தியானலிங்கத்தில் காலை 6 மணிக்கு ஈஷா பிரம்மச்சாரிகளின் “ஆஉம் நமசிவாய” மந்திர உச்சாடனத்துடன் தொடங்கின. பின்னர், ஆதிசங்கரர் இயற்றிய ‘நிர்வாண ஷடகம்’ என்ற சக்திவாய்ந்த மந்திர உச்சாடனத்தை பிரம்மச்சாரிகள் பாடினர்.

cover f2 scaled

தொடர்ந்து, ஆசிரமவாசிகளின் சூஃபி பாடல்களும், கார்த்திக் ஓதுவார் குழுவினரின் தேவாரப் பதிகங்களும் அர்ப்பணிக்கப்பட்டன. தொடர்ந்து, சிதம்பரம் கோவில் தீட்சிதர்களின் ‘ருத்ரம் சமகம்’ வேத பாராயணம் நடைபெற்றது. மேலும், ‘அஷ்ரப் அலி.கே’ மற்றும் ‘இஷால் முராத்’ குழுவினரின் இஸ்லாமிய பிரார்த்தனைகளும், சிறப்பு விருந்தினர்களின் புத்த மந்திர உச்சாடனமும் இடம்பெற்றன.

இதனுடன், சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதி மாணவர்களின் பக்திப் பாடல்களும், சிறப்பு விருந்தினர்களின் குர்பானி கீர்த்தனைகளும் அர்ப்பணிக்கப்பட்டன. பின்னர், கிரிஸ் கொயர் இசைக்குழுவின் கிறிஸ்தவ பக்திப் பாடல்களும், சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றன.

ஈஷாவில் உள்ள தியானலிங்கம், சுமார் மூன்று ஆண்டுகள் தீவிர ஆன்ம சாதனைகளுக்குப் பிறகு சத்குருவால் 1999-ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. பாதரசத்தைக் கொண்டு ரசவைத்திய முறையில் உருவாக்கப்பட்ட லிங்கங்களில் இதுவே உலகிலேயே மிகப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.