வால்பாறை – பொள்ளாச்சி சாலையில் வனவிலங்குகள் அதிகம் நடமாடுவதால், வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வால்பாறை – பொள்ளாச்சி சாலையில் குடிநீர், உணவு தேடி வனவிலங்குகள் சாலையை கடந்து செல்கின்றன. யானைகள், வரையாடு, சிங்கவால் குரங்குகள்,  காட்டுமாடு, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.

தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் நிலையில், மலை பாதையில் பாதுகாப்பாக பயணிக்க வாகன ஓட்டிகளுக்கு ஆழியாறு சோதனைச்சாவடியில் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

வால்பாறை வரும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ள பகுதியில் வாகனத்தை விட்டு  இறங்கி, புகைப்படம், வீடியோ எடுக்க கூடாது. வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது. வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.