கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி மக்கள் என்னை தொடர்ந்து 5வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்து வெற்றி பெற வைத்துள்ளனர். எனக்காகவும், அதிமுக வெற்றிக்காகவும் பாடுபட்ட அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மனமார்ந்த நன்றி.
அதிமுக என்பது எங்களின் உயிர் மூச்சு. கட்சியை பாதுகாப்பது எங்கள் கடமை. எங்களுடைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். நாங்கள் வைத்த சில கோரிக்கைகளை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். கட்சியின் வளர்ச்சிக்கும், மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்குமான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். இனி வரும் காலங்களில் வெற்றியை நோக்கி செயல்படுவோம். பதவிக்காக நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை. மக்களின் ஆதரவு உள்ளது. அதையே சட்டமன்ற தேர்தலில் மக்கள் நிரூபித்துள்ளனர்.
திமுக அரசுக்கு எதிராக செயல்படுவதே எங்களின் முக்கிய குறிக்கோள். எங்கள் கட்சிக்குள் அண்ணன்-தம்பி போல ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம். தொண்டர்கள் என்ன விரும்புகிறார்களோ அதையே செய்வோம். கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. அனைவரும் ஒன்றுபட்டே உள்ளோம்.
அண்ணன் சி.வி. சண்முகத்தின் கருத்தும், எங்கள் கருத்தும் ஒன்றுதான். சிலர் தேவையில்லாமல் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அதற்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். கட்சியின் தோல்வி மீண்டும் வரக்கூடாது. அதற்காக அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நல்லாட்சி வழங்கும்.
கோவையில் 10 வயது சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. இதுபோன்ற கொடூர சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது. தமிழக வெற்றிக் கழகம் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மாநிலத்தில் குற்றச்சம்பவங்கள் குறைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை மாவட்ட வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். அந்த வளர்ச்சி திட்டங்கள் எந்தவித தடையும் இல்லாமல் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும். விஜயபாஸ்கர் ஆலோசனை குறித்து கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதில் சொல்ல முடியாது. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றார்.
