நீலாம்பூர் – மதுக்கரை இடையேயான 28 கிலோமீட்டர் புறவழி சாலையை ஒரு ஆண்டு பராமரிக்கத் தேசிய நெடுஞ்சாலைத் துறை டெண்டர் வெளியிட்டுள்ளது.
1999 ஆம் ஆண்டு முதல் நீலாம்பூர் பைபாஸ் சாலையை எல்&டி நிறுவனம் பராமரித்து வருகிறது. 30 வருடங்களுக்கு இந்தச் சாலையைப் பராமரிக்க எல்&டி நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்து இருந்தது. இந்தப் புறவழி சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் தேசிய புறவழி சாலை தேசிய நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்த காலம் 2032 வரை உள்ளதால் இதற்காக அந்த நிறுவனத்திற்கு ரூ.199 கோடி இழப்பீட்டை அரசு வழங்கியது.
இரண்டு வழி சாலையை விரிவாக்கம் செய்யத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி இன்னும் சில மாதங்களில் முடிவடையும் எனத் தெரிகிறது. இது தயாரானதும். அரசிடம் அனுமதி கிடைத்த பின்பு விரிவாக்கப் பணிக்கு டெண்டர் விடப்படும்.
சாலை விரிவாக்கம் பணிகளைத் தொடங்கும் வரை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால், எல் அண்டு டி நிறுவனம் இந்த மாதம்வரை மட்டும் பராமரிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், 2025 ஜூன் 20 முதல், 2026 ஜூன் வரை ஓராண்டு காலத்துக்கு, நீலாம்பூர் முதல் மதுக்கரை வரையிலான புறவழிசாலையை பராமரிக்கும் பணிகளுக்கு ரூ.5.57 கோடிக்கு டெண்டர் கோரியுள்ளது.