“உங்களை கொலை செய்து விடும் என்று தெரிந்து கொண்டே ஒரு கத்தியை உங்கள் கையில் வைத்து கொண்டு அலைந்திருக்கிறீர்களா?”
கோவை கற்பகம் அகடெமியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றில் இந்த கேள்வியை இளைய சமுதாயத்தை நோக்கி எழுப்பியது ‘தி யுனைடெட் எஜுகேஷ்னல் அண்டு சோசியல் வெலப்பேஃர் ட்ரஸ்ட்’.
இன்றைய இளைய சமுதாயம் புகையிலை, போதை பொருள், மது என பலவற்றினால் தெரிந்தும், தெரியாமலும் சீரழிந்து வருகின்றது. இவற்றை கையில் வைத்துக்கொண்டு இருப்பது உயிருக்கே ஆபத்தான ஒன்று என்பதை விளக்கிக்கூறும் விதமாக யுனைடெட் அறக்கட்டளை மற்றும் கற்பகம் அகடெமி சார்பில் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்வை கற்பகம் அகடெமியின் துணை வேந்தர் ரவி, யுனைடெட் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராமகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
இந்த நிகழ்வில் போதை பொருட்களை பய்னபடுத்துவதால் ஏற்படும் தீமைகளை தாண்டி, பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சைபர் குற்றங்கள் ஆகியவை பற்றிய விழிப்புணர்வு பதாகைகள், போஸ்டர்கள் நிறுவப்பட்டிருந்தன.

முன்னதாக கற்பகம் அகடெமியின் துணை வேந்தர் ரவி பேசுகையில், இந்த நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள போஸ்டர்கள், விழிப்புணர்வு பதாகைகள் அனைத்திலும் மிக அவசியமான செய்திகள், கருத்துக்கள் உள்ளன. இதை தொடர்ந்து பார்க்கும்போது அதன் தாக்கம் மனதில் பதியும், என்று கூறினார்.
யுனைடெட் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ராதாகிருஷ்ணன் பேசும்போது, இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தனது அறக்கட்டளை பலவருடங்களாக தொடர்ந்து நடத்திவருகிறது எனவும், இதை பார்வையிடும் நூற்றுக்கணக்கானோரில் புகையிலை பழக்கம் உள்ள 10 பேர் மாறினால் கூட அது பெரும் வெற்றிதான் என்றார்.
கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராமகுமார் பேசுகையில், இன்று இளம் வயதினர் பலரும் போதை பொருட்களுக்கு அடிமையாவதை காண முடிகிறது என்று வருத்தத்துடன் கூறினார். போதை பழக்கமானது மாணவர்களிடையே ஏற்படும் போது, அவர்களுடைய கல்விவாழ்க்கை பெரிதிலும் பாதிப்படைகிறது, மேலும் எவ்வித போதை பொருளாக இருந்தாலும் அதை பயன்படுத்துபவருக்கே தெரியாமல் அது மன அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார்.
இளைஞர்கள், தங்களை நம்பித்தான் தங்களது குடும்பம் உள்ளது என்பதை நினைவில் கொண்டு போதை பொருட்களை கைவிட வேண்டும் எனவும், அதை பயன்படுத்துவதை நிறுத்தி வாழ்க்கையில் நன்கு படித்து முன்னேற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
