கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாலையோரம் இருந்த பிரம்மாண்ட மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில், அதில் பயணித்தவர் பலத்த காயம் அடைந்தார். இந்த விபத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பலத்த சேதம் அடைந்ததால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

கோவை, ​ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் ரோட்டில் சரக்கு வாகனம் சென்று கொண்டு இருந்த போது, எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த ஒரு பழமையான மரம் மடமடவென சரிந்து வாகனத்தின் மீது விழுந்தது. இதில், சரக்கு வாகனம் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுனருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

accident 2 scaled

அங்கு இருந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.​ மரத்தின் அடியில் சிக்கிய அந்தச் சரக்கு வாகனம் மட்டுமின்றி, சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் மற்றும் சில இருசக்கர வாகனங்கள் மீது மரக்கிளைகள் விழுந்ததில் அவை சேதமடைந்தது.

தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், ராட்சத ரம்பங்கள் மூலம் மரத்தைத் துண்டு, துண்டாக வெட்டி அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.