இடம்: கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகம்
நாள்: ஜூலை 17 – ஜூலை 26
இன்றைய இளம் தலைமுறையினரிடம் புத்தக வாசிப்புப் பழக்கம் இல்லை என்பது பொதுவாக நிலவும் கருத்து. ஆனால், கோவை புத்தகத் திருவிழாவிற்கு ஒருமுறை வந்து பார்த்தால், அந்தக் கருத்து உண்மையல்ல என்பதை எளிதில் உணர முடியும்.
பலரும் தங்களுக்குப் பிடித்த புத்தகங்களை ஆர்வத்துடன் தேடித் தேர்ந்தெடுத்து வாங்குவதையும், குடும்பங்களுடன் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை புத்தக அரங்குகளில் உற்சாகமாகச் சுற்றி வருவதையும் காண முடியும்.
ஒவ்வொரு ஆண்டும் கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் கோவை புத்தகத் திருவிழா நடக்கும். இது மேற்கு தமிழகத்தின் மிகப்பெரிய புத்தக விழாவாகும். அந்த வகையில் இந்த ஆண்டிற்க்கான கோவை புத்தகத் திருவிழா 2026 ஜூலை 17ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. கோவை மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித் துறை, கொடிசியா அமைப்பு ஆகியவை இணைந்து இதனை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றன.
இதில் 2 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள், 300-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறுகின்றன. புத்தக கண்காட்சியுடன் கலை மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
மாணவ, மாணவிகள் பங்கு பெறும் இலக்கிய நிகழ்வுகள், கவியரங்குகள், கதை சொல்லும் நிகழ்வுகள், பேச்சுப்போட்டி, சிறுகதைப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவையும் வழக்கமாக நடைபெறும்.
புகழ் பெற்ற இலக்கிய ஆளுமைகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பிரபல தலைவர்கள் கலந்து கொள்ளும் கலை, இலக்கிய நிகழ்வுகள் தினமும் கண்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளன. எழுத்தாளர்களுடனான சந்திப்புகள், இலக்கிய உரையாடல்கள், புதிய நூல்களின் அறிமுகங்கள் ஆகியவையும் இடம்பெறும். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.
மனம் விரும்பும் புத்தகங்களைத் தேடி, வாங்கி, வாசிப்பின் மகிழ்ச்சியை அனுபவிக்க வாருங்கள்.
