கோவை விமன்ஸ் பாலிடெக்னிக் கல்லூரி சிக்னல் பகுதியில் இருந்து காந்திபுரம் செல்லும் சாலையில் சில நாட்களுக்கு முன்னதாக குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்டது. அதன் பின்னர் தோண்டப்பட்ட அந்த பகுதி ஒரு விதமாக சீரமைக்கப்பட்டது.

இருந்தபோதும் இங்கு ஜல்லி கற்கள் சாலையில் ஆங்காங்கே படர்ந்து இருந்தன.
அதேபோல கல்லூரியில் இருந்து காந்திபுரம் நோக்கி செல்லும் சாலையில் பொதுப்பணிக்காக சமீபத்தில் குழி தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றது. இவை இன்னும் சரிவர சீரமைக்கப்படாமல் உள்ளன.
இந்நிலையில் இந்த சாலை பகுதியிலும், ஏற்கனவே சீரமைக்கப்பட்ட பகுதியிலும், மண் தேங்கி உள்ளது. சில இடங்கள் குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் சிக்னலை கடக்க வேகமாய் இவ்வழியே செல்லும் வாகனங்கள் ஆபத்தில் சிக்க வாய்ப்புள்ளது.

இவ்வழியே ஸ்கூட்டரில் வரக்கூடிய பெண் வாகனஓட்டிகளுக்கு, சற்று வயதானவர்களுக்கும் இது சவாலாகவும் ஆபத்தாகவும் அமையலாம் எனவே இவ்விடங்களில் தேங்கியுள்ள கற்களை விரைந்து அகற்ற வேண்டும் என அவ்வழியே பயணிப்போர் தெரிவித்தனர். எனவே சாலையில் படர்ந்துள்ள மண்ணை அகற்றி, இங்கு வேகமாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகனஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

