தரமான கருப்பு எள்ளின் விலை கிலோவுக்கு சுமார் ரூ.140 முதல் ரூ.145 வரை இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில்: உலகிலேயே எள் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது; அதைத் தொடர்ந்து மியான்மர் மற்றும் சூடான் நாடுகள் உள்ளன. 2024-ஆம் ஆண்டில் உலகளாவிய எள் உற்பத்தி சுமார் 6.7 மில்லியன் டன்களாக இருந்தது.
இதில் இந்தியா 0.87 மில்லியன் டன்களை உற்பத்தி செய்தது. அடுத்தடுத்த இடங்களில் மியான்மர் மற்றும் சூடான் ஆகியவை உள்ளன. மதிப்பு அடிப்படையில் தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவை இந்திய எள் ஏற்றுமதிக்கான முக்கிய சந்தைகளாக உள்ளன.
இந்தியாவில் பயிரிடப்படும் முக்கியமான எண்ணெய் வித்துப் பயிர்களில் எள்ளும் ஒன்றாகும். இது உயர்தர சமையல் எண்ணெய் மற்றும் சத்துக்கள் நிறைந்த பண்புகளுக்காகப் பெரிதும் மதிக்கப்படுகிறது. இந்தியாவில் காரீஃப் மற்றும் ரபி ஆகிய இரு பருவங்களிலும் எள் பயிரிடப்படுகிறது.
தமிழ்நாட்டில், 2024-25 ஆம் ஆண்டில் சுமார் 0.47 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் எள் சாகுபடி செய்யப்பட்டு, 0.34 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது. இதன் உற்பத்தித் திறன் ஹெக்டேருக்கு 428 கிலோவாக இருந்தது. தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, ஈரோடு, கடலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கரூர் மற்றும் அரியலூர் ஆகியவை எள் உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும்.
வறட்சியைத் தாங்கி வளரும் திறன் கொண்ட பயிர் என்பதால் இம்மாநிலத்தில் எள் சாகுபடி செய்யப்படுகிறது. வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய இரு வகையான எள் விதைகள் மிகவும் பிரபலமானவை என்றாலும், சிவப்பு முதல் பழுப்பு நிறம் வரையிலான பிற வகைகளும் உள்ளன. எண்ணெய் எடுப்பதற்குப் பழுப்பு மற்றும் கருப்பு நிற விதைகள் விரும்பப்படுகின்றன, அதே வேளையில் வெள்ளை எள் முக்கியமாக இனிப்பு மற்றும் தின்பண்டங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
இச்சூழலில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ‘உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை நுண்ணறிவுப் பிரிவு’, ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த 25 ஆண்டுகளாக நிலவிய எள் விலைகளை ஆய்வு செய்துள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகளின்படி, அறுவடை காலத்தில் தரமான கருப்பு எள்ளின் விலை கிலோவுக்கு சுமார் ரூ.140 முதல் ரூ.145 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வர்த்தகத் தகவல்களின்படி, பருவமழையின் போக்கு மற்றும் எள் பயிரிடும் பிற மாநிலங்களிலிருந்து வரும் வரத்தின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து விலை நிலவரங்கள் மாறுபடலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
