வின்னர்ஸ் இந்தியா குழுமங்களின் சார்பில், 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின பள்ளி மாணவர்களுக்கு ஸ்கூல் பேக்குகள், நோட்டுகள், எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.
இதுகுறித்து கோவை எட்டிமடையில் உள்ள ஆர்.கிருஷ்ணசாமி கவுண்டர் நினைவு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோவில் நிர்வாக அலங்காவலரும், வின்னர்ஸ் இந்தியா குழுமங்களின் நிர்வாக இயக்குனருமான கண்ணன் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் வின்னர்ஸ் இந்தியா குழுமங்கள் சார்பிலும், எங்கள் தந்தையின் நினைவு அறக்கட்டளை சார்பிலும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமுதாய பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
எங்களது பிரதான தொழில் ரியல் எஸ்டேட் என்பதால் அது சம்பந்தமான ஏராளமான நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் கோவை மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு வீட்டுமனைகளை பரிசாக தந்துள்ளோம்.

இது தவிர சிறப்பாக செயல்படும் கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், இருதயம் மற்றும் சிறுநீரக நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு மீண்டு வந்த மாணவ- மாணவிகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவர்கள் பெயரில் வீட்டு மனைகளை இலவசமாக கிரயம் செய்து தந்துள்ளோம்.
அனைத்து வசதிகளையும் கொண்ட எங்கள் லே-அவுட்டுகளில் நாங்கள் இலவசமாக கொடுத்த வீட்டு மனைகளில் இன்று ஏராளமானோர் வீடு கட்டி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இதுதவிர சின்னாம்பதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு ஐந்து சென்ட் இடம் தானமாக கொடுத்து உள்ளோம். தற்போது அந்த இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு கடந்த மாதம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்து உள்ளது.

சின்னாம்பதியில் உள்ள அரசு பழங்குடியின உண்டு உறைவிட தொடக்கப் பள்ளியை தத்து எடுத்து அங்கு படிக்கும் மாணவர்களுக்கு தேவையான புத்தக பைகள், நோட்டு புத்தகங்கள், பேனா-பென்சில் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறோம்.
இன்று நடந்த விழாவில் 50-க்கும் மேற்பட்ட பழங்குடியின பள்ளி மாணவர்களுக்கு ஸ்கூல் பேக்குகள், நோட்டுகள், எழுது பொருட்கள் வழங்கி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

