வீட்டில் செடிகள் வளர்த்து, அதில் பூக்கள் பூக்கும்போது மனம் அலாதி மகிழ்ச்சி கொள்ளும். சிலர் பிள்ளைகள்போலப் பார்த்துப் பார்த்து வளர்ப்பார்கள். இப்போது பலரும் தங்கள் வீடுகளில் செடிகளை வளர்க்க விரும்புகின்றனர். விதவிதமான பூச்செடிகளை ஆசையாக வாங்கி தொட்டிகளில் வளர்க்கின்றனர். செடிகள் வளர்ப்பது பிடித்த விசயமாக இருந்தாலும், ஆசை இருந்தால் மட்டும் போதாது. அதை எப்படி பராமரிக்க வேண்டும் எனவும் தெரிந்திருக்க வேண்டும்.
கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருப்பதால் செடிகள் எளிதில் வாடி விடும். இதனால் சிலர் அடிக்கடி தண்ணீர் ஊற்றுவார்கள். ஆனால் அப்படி செய்யக் கூடாது. செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றவும் குறிப்பிட்ட நேரம் உள்ளது என உங்களுக்குத் தெரியுமா? எப்போது தண்ணீர் பாய்ச்ச வேண்டும் எனப் பெரும்பாலானவர்களுக்குக் குழப்பம் இருக்கும்.
சில தாவரங்கள் வெப்பத்தை தாங்கி வளரும். சில தாவரங்கள் வெப்பத்தைத் தாங்காது. இதனைத் தெரிந்து தான் தண்ணீர் விட வேண்டும். மேலும் சில தாவரங்களை நிழலில் தான் வைக்க வேண்டும். சிலவற்றிற்கு சூரிய ஒளி முக்கியம்.
வெயில் காலத்தில் சூரியன் உதித்த பின்னர் அல்லது மதியம் தண்ணீர் ஊற்றினால் இலைகள், வேர்கள் கருகி விடும். இந்த நேரங்களில் சூரியக் கதிர்கள் நீரை உறிஞ்சிவிடும்.
சூரியன் மறைந்த பின் மாலையில் தண்ணீர் ஊற்றினாலும் கருகும். சூரிய அஸ்தமனத்திற்குப் பின் உடனடியாகத் தண்ணீர் ஊற்றாமல், ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் பாய்ச்சலாம். சூரிய உதயத்திற்கு முன் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது தான் சிறந்த நேரம். இந்த நேரத்தில் மண் குளிர்ச்சியாக இருக்கும். அதனால் வேர்கள் தண்ணீரை நன்கு உறிஞ்சிக் கொள்ளும்.
காலையில் தண்ணீர் பாய்ச்சினால் நாள் முழுவதும் வெப்பத்தைத் தாங்கி, சூரிய ஒளியை தாக்குப் பிடிக்கும். அல்லது மாலையில் மண் குளிர்ந்த பின் பாய்ச்சலாம். முதல் நாள் பாய்ச்சிய தண்ணீரின் ஈரப்பதம் இருந்தால் அதற்கு ஏற்றவாறு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இல்லையெனில் ஒருநாள் விட்டுத் தண்ணீர் விடலாம்.
அதேசமயத்தில் தண்ணீர் ஊற்றும் முன் செடிகளின் தன்மையைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். சில தாவரங்களுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும். சிலவற்றுக்குக் குறைவாகத் தேவைப்படும். இதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். சில பூச்செடிகள் குறைந்த தண்ணீரில் நன்கு வளர்ந்து பூக்கும்.
தவறான நேரத்தில் தண்ணீர் பாய்ச்சினால் பல பிரச்சினைகள் ஏற்பட நேரிடும் எனத் தோட்டக்கலைத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர். அதிலும் கோடை காலத்தில் நீங்கள் நினைத்த நேரத்தில் எல்லாம் தண்ணீர் பாய்ச்சக் கூடாது. வெயில் காலத்தில் செடிகளுக்குச் சிறப்பு கவனம் தருவது அவசியம்.