மரம் தங்கசாமி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகமெங்கும் 65-க்கும் மேற்பட்ட இடங்களில் மரம் நடும் விழாக்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மரம் தங்கசாமி, டிம்பர் மர சாகுபடி குறித்து விவசாயிகள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, எண்ணற்ற விவசாயிகளை மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாற்றினார். அவர் ஈஷாவின் ஆரம்பகால இயக்கமான பசுமைக் கரங்கள் திட்டத்துடன் இணைந்து நீண்ட காலம் பணியாற்றினார்.

அவரது நினைவு நாளை சிறப்பிக்கும் வகையில் காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் உள்ள 67 விவசாய நிலங்களில், 434 ஏக்கர் நிலப்பரப்பில் மொத்தம் 1,04,602 டிம்பர் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதுதவிர, ஈஷா யோக மையம் மற்றும் பேரூர் ஆதீனம் இணைந்து செயல்படுத்தும் “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டத்தின்படி, 14 பஞ்சாயத்துகளில் 114 அரச மரங்கள் நடப்பட்டது.
