கோவை வ.உ.சி. பூங்கா அருகே உள்ள மருதம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடங்கியது. இதனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சம்பத்குமார் பேசியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு கோவையில் 10 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய சேலைகளை வழங்கி, அதற்குப் பதிலாக புதிய சேலைகளை வாங்கிக் கொள்ளும் வகையில் பரிமாற்றத் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோவையில் சாலை சீரமைப்புப் பணிகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் காவல்துறை சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் நடிகர் விஜய் சேதுபதி தொடர்பான விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதில் சொல்லத் தேவையில்லை. அதனை பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவே பார்ப்பதாக தெரிவித்தார்.
திமுகவினர் தங்களை விமர்சித்து வருவது அவதூறாகவும், ஒருமையில் மற்றும் தனிநபர் விமர்சனமாகவும் இருப்பதாகக் கூறிய அவர், அதற்கு பொதுமக்களும், முதலமைச்சரும் ஏற்கனவே பதில் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
வரவிருக்கும் தேர்தல் மட்டும் முக்கியமல்ல. அடுத்த தலைமுறையின் எதிர்காலமே முக்கியம். அடுத்த தலைமுறையினர் தங்களது எதிர்காலத்தை பார்த்துக் கொள்வார்கள். மேலும், நிறைவடைந்துள்ள பல்வேறு பணிகளை ஆய்வு செய்து, அவற்றை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
