கோவையில் 10 வயது சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு நஷ்ட ஈடாக ரூபாய் 1 கோடி வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டிருப்பது: கோவை மாவட்டம், சூலூர், பள்ளபாளையம், பாரதிபுரம் பகுதியை சார்ந்த 10 வயது சிறுமி கடந்த 21.05.2026 அன்று மாலை சமூக விரோதிகளால் இரு சக்கர வாகனத்தில் கடத்தப்பட்டு பாலியியல் வன்கொடுமைக்கு ஆளாகி, படுகொலை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், மன வேதனையும் அளிப்பதாக உள்ளது.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நிகழ்ந்து, பொது மக்களின் மிகுந்த வெறுப்புக்கு உள்ளானது. சமூக குற்றங்கள் நிகழ போதை பொருட்கள் கலாச்சாரம் அதிகரித்தது, மிக முக்கிய காரணமாக விளங்கியது. இதனால் கடந்த ஆட்சியாளர்களின் மீது பொது மக்கள் மிகுந்த வெறுப்பில் இருந்தனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்பதற்கேற்ப்ப தற்போதைய இந்த நிகழ்வு சான்றாக உள்ளது. இந்நிகழ்வில் காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளா? என்பதை உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.
மேலும், இதுபோன்ற சமூக குற்றவாளிகளை காவல்துறை உடனுக்குடன் கண்டுபிடித்து, அதிகபட்ச கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிபடுத்தி, பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.
தற்போது தமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசின் முதலமைச்சர் அவர்கள், வரும் காலங்களில் இது போன்ற சம்பங்கள் நடைபெறமால் தடுக்க, போர் கால பாதுகாப்பு நடவடிக்கைகளையும், போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்க்கு விரைவில் நீதி கிடைக்கவும், அக்குடும்பத்திற்கு அரசு நஷ்ட ஈடாக ரூபாய் 1 கோடி வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

