தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விவசாயிகள் நலனை காற்றில் பறக்கவிட்டது போல் வேளாண் பட்ஜெட் அமைந்திருப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் கூறியிருப்பதாவது: ‘கோட் சூட் போட்ட விவசாயி’ முதல்வர் அவர்களே.. இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக வேளாண் பட்ஜெட்டில், தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியில் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவிண்டாலுக்கு ரூ.3,500 மற்றும் கரும்பிற்கு ரூ. 4,500 வழங்கப்படும் என்று அறிவித்தது என்னாச்சு..?
60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 3,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு என்னாச்சு…? விவசாயி உரிமைத் தொகை விதைப்புக் கால நிதியுதவி ரூ. 15,000/- என்னாச்சு?
Simple – ஆ சொல்லனும்னா நீங்க நடிச்ச கத்தி பட வசனம்தான் நினைவுக்கு வருகிறது.
“மூன்றுவேளை பசி எடுத்தா சாப்பாட்டை நினைக்கிறோம்..! ஆனா அந்த சாப்பாட்டை உருவாக்குற விவசாயியை மட்டும் மறந்துடுறோம்..!”
அப்படித்தான் இந்த தவெக அரசு பல கவர்ச்சித் திட்டங்களை அறிவித்துவிட்டு, அதற்கு வடிவம் கொடுக்கும் விவசாயிகள் நலனை காற்றில் பறக்கவிட்டது போல் அமைந்திருக்கிறது இந்த வேளாண் பட்ஜெட். இவ்வாறு கூறியுள்ளார்.
