நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாகவும், விநியோகம் சீராக நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் எண்ணெய் தொழில் துறை உறுதியளித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி எண்ணெய் தொழில் துறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பிபிசிஎல் மற்றும் எச்பிசிஎல் ஆகியவை, நாட்டின் பல பகுதிகளில் திடீரென அதிகரித்துள்ள எரிபொருள் தேவையையும் மீறி, பெட்ரோல்,  டீசல் மற்றும் எல்பிஜி ஆகியவற்றின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து ஒருங்கிணைந்த செயல்பாடுகள் மற்றும் விநியோக மேலாண்மையை மேற்கொண்டு வருகின்றன.

கடந்த சில நாட்களாக, பல மாநிலங்களில் பருவகால வேளாண்மை மற்றும் அறுவடை பணிகளின் காரணமாக பெட்ரோலிய பொருட்களின் தேவை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. மேலும், பிற விநியோகஸ்தர்களுடன் ஒப்பிடும்போது குறைந்த விலை காரணமாக சில்லறை வாடிக்கையாளர்கள் பொதுத்துறை ரீட்டெயில் நிலையங்களுக்கு மாறுதல் அடைவதும், நிறுவன மற்றும் வணிக பயன்பாட்டு வாடிக்கையாளர்கள் சில்லறை எரிபொருள் நிலையங்களை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியதும் கூடுதல் தேவையை உருவாக்கியுள்ளது.

பொதுத்துறை OMCகள், நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள தங்கள் டெர்மினல்கள், டெப்போக்கள், குழாய் வழித்தடங்கள், எல்பிஜி நிரப்பு ஆலைகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் தடையற்ற விநியோகத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

விநியோக குழுக்கள், போக்குவரத்து வலையமைப்புகள், டெர்மினல் செயல்பாடுகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரீட்டெயில் நிலையங்கள் 24×7 முறையில் செயல்பட்டு, சந்தைகளுக்கு தேவையான பொருட்களை தாமதமின்றி கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும், எரிபொருள் விநியோகம் தடையின்றி நடைபெற மாநில நிர்வாகங்களுடனும் பொதுத்துறை OMCகள் நெருங்கிய ஒருங்கிணைப்பில் செயல்பட்டு வருகின்றன.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாகவும், விநியோகம் சீராக நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் எண்ணெய் தொழில் துறை பொதுமக்களுக்கு உறுதியளிக்கிறது.

அதிகரித்துள்ள தேவையை திறம்பட சமாளிக்கும் வகையில், பொதுத்துறை OMCகள் தொடர்ந்து கையிருப்பு நிலவரத்தை ஆய்வு செய்து, விநியோகம் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் திட்டமிடல்களில் நெருங்கிய ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் வழக்கமான கொள்முதல் நடைமுறையையே தொடருமாறும், தேவையற்ற பதற்ற கொள்முதல் செய்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், எரிபொருள் கிடைப்புத் தகவல்கள் தொடர்பாக அதிகாரப்பூர்வ அமைப்புகள் மற்றும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வெளியிடும் தகவல்களை மட்டுமே நம்புமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். எனக் கூறப்பட்டுள்ளது.