கோவை மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள தென்கயிலாயம் என போற்றப்படும் வெள்ளியங்கிரி மலை பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பகல் நேரங்களில் மலையேற்றத்தைத் தவிர்க்குமாறு பக்தர்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஏழாவது மலை உச்சியில் சுயம்பு வடிவில் அருள்பாலிக்கும் ஈசனை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவின்படி, இந்தாண்டும் பக்தர்கள் மலையேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்தாண்டைப் போல உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், மருத்துவ பரிசோதனைக்கு பின் மட்டுமே பக்தர்கள் மலையேற்றத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இருப்பினும், கடந்த மாத இறுதியிலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மலையேற்றத்தின் போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் முதல் இதுவரை, வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது உடல்நலப் பிரச்னைகளால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெயிலின் உக்கிரம் தொடர்வதால் பகல் நேரங்களில், மலையேறும் பக்தர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. இதையடுத்து, வெயிலின் தீவிரம் காரணமாக பகல் நேரங்களில் மலையேறுவதைத் தவிர்க்குமாறு வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். அதன்படி, பக்தர்கள் காலை 9 மணி வரை மற்றும் மாலை 4 மணிக்குப் பிறகு மட்டுமே மலையேற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உள்ள நேரத்தில் மலையேற்றத்தைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
