சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் மாற்று மருத்துவத் துறை சார்பில், கோவை அவினாசி சாலையில் உள்ள ஜி.கே.என்.எம் ஒருங்கிணைந்த புறநோயாளர் மையத்தில் 12வது சர்வதேச யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

மருத்துவ இயக்குநர் டாக்டர் ராகவேந்திரா, மாற்று மருத்துவ ஆலோசகர்கள் டாக்டர் பிரியதர்ஷினி மற்றும் டாக்டர் சுப்ரமணியன் காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
சுமார் 250-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்று, ஒருங்கிணைந்த மேடை யோகா நிகழ்வில் கலந்து கொண்டனர். டாக்டர் பிரியதர்ஷினி, டாக்டர் சுப்ரமணியன் காந்தி ஆகியோர் பொதுவான யோகா நெறிமுறைகளின் அடிப்படையில் யோகா பயிற்சிகளை வழிநடத்தினர்.

பங்கேற்பாளர்களுக்காக இலவச ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையில் சத்தான உணவுப் பொருட்கள் காட்சியும் விற்பனையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் பேசிய ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி, யோகா என்பது உடலையும் மனதையும் ஒரே நோக்கில் ஒருங்கிணைத்து, முழுமையான ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் வழங்கும் ஒரு சிறந்த வாழ்க்கை முறை என தெரிவித்தார்.
