கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் ஒன்றான நஞ்சப்பா சாலையில் பாதாள சாக்கடையின் குழாய் உடைந்ததால், கழிவுநீர் சாலையில் வெளியேறி தேங்கி வருகிறது. இப்பகுதியில் ஏராளமான வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் அலுவலகங்கள் செயல்பட்டு வருவதுடன், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் பரபரப்பான சாலையாகவும் உள்ளது.

கழிவுநீர் சாலையில் செல்வதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், வியாபாரிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சுகாதாரக் கேடு ஏற்படுவதற்கும், தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் நிலவுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, கோவை மாநகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை குழாய் உடைப்பை உடனடியாக சரிசெய்து, சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
