ஈஷா கிராமோத்சவத்தின் 2ம் கட்டப் போட்டிகள் 6 மாநிலங்களில் கோலாகலமாக  நடைபெற்றது. பெங்களூரு ஈஷா மையத்தில் சத்குரு முன்னிலையில் நடைபெற்ற போட்டியில் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா மற்றும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினர்.

நடப்பாண்டில் 17வது ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய பகுதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றன.

isha 1 scaled

இதில் 35,000-க்கும் மேற்பட்ட  கிராமங்களில் இருந்து 60,000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர். இதில் ஆண்களுக்கான வாலிபால், பெண்களுக்கான த்ரோபால் போட்டிகள் நடத்தப்பட்டன.

தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, கேரளா மற்றும் ஓடிசா ஆகிய ஆறு மாநிலங்களிலும், முதற்கட்ட கிளஸ்டர் அளவிலான போட்டிகள் நிறைவடைந்து நேற்று இரண்டாம் கட்டப் போட்டிகள் நடைபெற்றன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கோவை, சேலம், வேலூர், தஞ்சாவூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 இடங்களில் போட்டிகள் நடைபெற்றன.

தஞ்சாவூரில் நடைபெற்ற போட்டிகளை தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம், மேயர் சன் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். திருநெல்வேலியில் சிறைத்துறை எஸ்பி செந்தாமரை கண்ணன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

ஆறு மாநிலங்களிலும் இருந்து இரண்டாம் கட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி செப்டம்பர் 21ம் தேதி, கோவை ஈஷாவில் உள்ள புகழ்பெற்ற ஆதியோகி வளாகத்தில் நடைபெற உள்ளது.