நான் முதல்வன் 2.0 மாநில மாணவர் திட்டப் போட்டியில் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்து சாதனை புரிந்துள்ளனர்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து “நான் முதல்வன் 2.0” மாநில அளவிலான மாணவர் திட்டப் போட்டியை நடத்தியது. இதில் பங்கேற்ற இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்று கல்வி நிறுவனத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

தமிழகம் முழுவதும் பெறப்பட்ட 15,337 யோசனைகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட 50 குழுக்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இதில் 15 சிறந்த குழுக்களுக்கு மாநில அளவிலான விருது வழங்கும் விழாவில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் மூன்று தலைசிறந்த குழுக்கள், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களிடமிருந்து நேரடியாக விருது பெற்றனர். இதில் 2ம் இடம் பிடித்த இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மாணவர்கள் முதல்வரிடம் பாராட்டு பெற்றனர்.

hicas 2

பன்முக வேளாண் இயந்திரம்

இந்துஸ்தான் மாணவர்கள் “ஃபார்ம் ரோவர் (Farm Rover)” எனும் பன்முக வேளாண் இயந்திரத்தைக் உருவாக்கியுள்ளனர். இது சிறிய பயிர் சாகுபடிக்கு ஏற்ற வகையில் உழுதல், எல்லை அமைத்தல், டிரிப் குழாய் அமைத்தல், மழைமூடி பதித்தல், நாற்று நடுதல், தெளித்தல் மற்றும் அறுவடை உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஒரே இயந்திரத்தின் மூலம் செய்யக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரம் தன்னிச்சையாக இயக்கக்கூடியதுடன், வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும் உழைப்பை குறைக்கவும் பெரிதும் உதவக்கூடியது என்பதை மாணவர்கள் நேரில் சோதனை செய்து நிரூபித்தனர்.

இந்த திட்டத்தின் முழுமையான வடிவமைப்பு மற்றும் செயலாக்கத்தில் வழிகாட்டிய பொறியியல் துறை இணைப் பேராசிரியர்கள் செந்தில் முருகன், ராஸ் மேத்யூ ஆகியோருக்கு மாணவர்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

புதுமையான திட்டம்

இந்துஸ்தான் கல்வி நிறுவன அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், மாணவர்களின் இந்த சாதனையை பாராட்டி, அவர்கள் கல்லூரிக்கு கொண்டுவந்த பெருமைக்காக வாழ்த்தினார்.

தொடர்ந்த கல்வி மற்றும் புதுமைத் துறை டீன் சிவா, “மாணவர்கள் காட்டிய அர்ப்பணிப்பு, நவீனத்துவம் மற்றும் முயற்சியின் காரணமாக அவர்கள் கனவை ஒரு நிஜமான உருவாக்கமாக மாற்றியுள்ளனர்” என பாராட்டினார்.

கல்லூரி முதல்வர் ஜெயா, “சமூகத்திற்கு பயன்படக்கூடிய ஒரு மதிப்புமிக்க புதுமையான திட்டத்தை வழங்கிய மாணவர்கள் மற்றும் அவர்களின் வழிகாட்டி பேராசிரியர்கள் செய்த சிறப்பான பங்களிப்புக்கு” நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தார்.