மத்திய அரசின் தவறான வேளாண் கொள்கைகள் மற்றும் உர விலை உயர்வை கண்டித்து கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில்: மத்தியில் பா.ஜ.க தலைமையிலான ஒன்றிய அரசு 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, இந்திய விவசாயிகளுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. குறிப்பாக, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி, உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து, அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான (C2+50) சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் என உறுதியளித்திருந்தது.
ஆனால், ஆட்சிக்கு வந்து 12 ஆண்டுகள் கடந்த பின்பும், விவசாயிகளுக்கு கொடுத்த இந்த வாக்குறுதியை ஒன்றிய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
உர விலை உயர்வு விவரங்கள்:
விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவலநிலை தொடரும் வேளையில், ஒன்றிய அரசு ரசாயன உரங்களின் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது விவசாயிகளை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
20:20 பாக்டம்பாய் (50 கிலோ): 400 ரூபாய் உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.2,150க்கு விற்கப்படுகிறது. 1575 ரூபாயிலிருந்து 275 ரூபாய் உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.2,150க்கு விற்கப்படுகிறது.
காம்பளக்ஸ் (10:26:26): 2200 ரூபாயிலிருந்து 250 ரூபாய் உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.2,450க்கு விற்கப்படுகிறது. அம்மோனியா சல்பேட்: 1200 ரூபாயிலிருந்து 200 ரூபாய் உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.1,400க்கு விற்கப்படுகிறது.
மேலும், அடுத்தடுத்த மாதங்களில் ரசாயன உரங்களின் விலை இன்னும் உயரக்கூடும் என்ற செய்திகளும் வெளியாகி வருகின்றன. ஒன்றிய அரசின் இத்தகைய தவறான பொருளாதார மற்றும் வேளாண் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, இந்த உர விலை உயர்வு பேரிடியாக அமைந்துள்ளது.
எனவே, உயர்த்தப்பட்ட ரசாயன உரங்களின் விலையை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட இருகூர் பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

