காட்டு யானைகள் பலியாவதை தடுக்க வனப்பகுதியில் செல்லும் மின்கம்பங்களுக்கு சிலிக்கான் உரைகள் பொருத்தப்பட உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மாவட்டம், மாதம்பட்டி அருகே கடந்த 8ம் தேதி மின்மாற்றியில் மின் கம்பியை தொட்ட காட்டு யானை மின்சாரம் தாக்கி பலியானது. இது வனஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் முழுவதும் வனப்பகுதியில் பல இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் காட்டு யானைகள் தொடர்ந்து உயிரிழக்கும் நிலையில் உள்ளது.

இதனால் வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு மின் பாதுகாப்பு அளிக்க மின்சார வாரியம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வன எல்லைகளில் சுமார் 500 கிலோ மீட்டர் நீளம் மின் இணைப்புகளுக்கு மின் பாதுகாப்பு அளிக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

அடுத்த வாரம் முதல் இந்த மின் பாதுகாப்பு பணிகள் தொடங்கும், அதன்படி வனப்பகுதியில் செல்லும் மின் கம்பிகளில் சிலிக்கான் உரைகள் பொருத்தப்படும். இதன் விளிம்புகள் ஒன்றோடு ஒன்று கூட்டிக் கொள்ளும், இதனால் மின் கம்பிகளை தொடும் வனவிலங்குகளை மின்சாரம் தாக்குவது தடுக்கப்படும்.

யானை வழித்தடம் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு துணை வழித்தடத்தில் 18 கிலோமீட்டர் தூரத்திற்கு சோதனை முறையில் மின் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள ஒரு துணை வழித்தடத்தில் இதேபோன்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்பொழுது இப்பணிகள் மீதமுள்ள துணை வழித்தடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். மற்ற மாவட்டங்களை விட கோவையில் அதிக யானை வழித்தடங்கள் இருப்பதால், இதற்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

வன எல்லைகளில் குறிப்பாக யானைகள் செல்லும் பாதைகளிலும் மின்சுற்று துண்டிப்பான்கள் நிறுவப்பட்டு வருகின்றது. இவை மின்கம்பியை காட்டு யானைகள் தொட்டவுடன், உடனடியாக மின்சாரத்தை துண்டிக்கும். கோவையில் சில இடங்களில் சோதனை ஓட்டங்களுக்காக இவை பொருத்தப்பட்டுள்ளன. அவை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

கோவை தெற்கு மற்றும் உடுமலைப்பேட்டை வட்டாரங்களில் தென்னை மரங்களால் மின்கம்பிகள் அறுபடுவது சாதாரணமாக நிகழ்கிறது. அங்கு மின் காப்பு செய்முறை பின்பற்ற செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வால்பாறையில் வனவிலங்குகளால், ஏற்படும் மின்விபத்துகளை தடுக்க மின்மாற்றிகளை சுற்றி வேலை அமைத்துள்ளோம். கோவை பகுதியில் உள்ள வன எல்லைகளுக்கு இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது என்றும், அதிகாரிகள் தெரிவித்தனர்.