அதிமுக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 30ம் தேதி குண்டு வெடிப்பு நடத்தி கொலை செய்யப் போவதாகவும், ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியும் கோவை காளப்பட்டி பகுதியில் இருந்து கடிதம் வந்துள்ளது.
கடிதத்தில், குறிப்பிட்ட ஒரு இடத்தில் 1 கோடி ரூபாய் பணத்தை வைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் மூன்று மாதங்களுக்குள் எஸ்.பி.வேலுமணியின் குடும்ப உறுப்பினர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்றும் அச்சுறுத்தப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் கடிதம் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிரட்டல் தொடர்பாக கோவை மாவட்ட காவல் ஆணையாளர் அலுவலகத்தில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தாமோதரன், மற்ற வழக்கறிஞர்களுடன் இணைந்து புகார் மனு அளித்தார். காவல்துறை தீவிர விசாரணை நடத்தி, மிரட்டல் விடுத்தவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தியுள்ளனர்.