கோவையை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி ஐடி நிறுவனமான கோவை.கோ தனது 140 ஊழியர்களுக்கு மொத்தம் $1.62 மில்லியன் (ரூ. 14.5 கோடி) போனஸாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

“ஒன்றாக நாம் வளர்கிறோம்” (Together We Grow) என்ற திட்டத்தின் கீழ், டிசம்பர் 31, 2022, அல்லது அதற்கு முன்பு நிறுவனத்தில் பணியேற்ற அனைத்து ஊழியர்களும், மூன்று ஆண்டுகள் சேவையை முடித்தவுடன், அவர்களின் மொத்த ஆண்டு சம்பளத்தில் 50% போனஸாக பெறுவார்கள்.முதல் கட்டமாக 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், ஜனவரி 31 அன்று தங்களது மாத ஊதியத்துடன் போனஸைப் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மற்றும் நிறுவனர் சரவண குமார் கூறுகையில்,

“நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் லாபத்திற்கும் பங்களிக்கும் ஊழியர்களுக்கு வெகுமதி அளிக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். ஊழியர்களுடன் நிறுவனத்தின் செல்வத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பது என் நீண்டநாள் கனவாக இருந்து வந்தது.

நாங்கள் ஊழியர்களை வெகுமதிப்படுத்தும் முறைகளை ஆராயும் போது, முதலில் பங்கு உரிமைத் திட்டங்கள் (Employee Stock Ownership Plans – ESOPs) அல்லது பங்குகளை (Shares ) வழங்கும் வாய்ப்புகளைக் கருதியிருந்தோம்.  ஆனால், அவை காகித பணமாக  இருக்கும் .அவை ஊழியர்களுக்கு உண்மையான பலனை அளிக்க வேண்டுமெனில், நிறுவனம் வெளிப்படை முதலீடு (External Capital) திரட்ட வேண்டும் அல்லது பங்குகளைப் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். இதனால், நாங்கள் பணமாகவே போனஸை வழங்கத் தீர்மானித்தோம், எங்கள் பணியாளர்கள் அதை தங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ள முடியும். வங்கிக் கடனை அடைப்பதற்கும், வீடு வாங்க முன்பணம் செலுத்துவதற்கும், அல்லது அவர்களின் தேவைக்கேற்ப முதலீடு செய்ய இதைப் பயன்படுத்தலாம்,” என அவர் கூறினார்.