கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ தோல்வியடையவில்லை, ஆவணங்கள்தான் தோல்வியடைந்துள்ளன என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கடந்த ஜூலை 22ம் தேதி மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் அனுப்பிய கடிதமானது, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இதை சிலர் நமது இரு நகரங்களுக்கும் எதிரான தீர்ப்பாக சித்தரிக்க முயல்கின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறான புரிதலாகும்.
கடந்த 2025 நவம்பரில், விரிவான திட்ட அறிக்கைகளை முழுமையான ஆய்வுக்குப் பிறகு திருப்பி அனுப்பிய போது, அதில் மக்கள் தொகை, தினசரி பயணிகளின் பயன்பாடு, உயர்மட்ட நிலையங்கள் அமைப்பதில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்ட முக்கியமான குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டன.
மீண்டும் கடந்த மே மாதத்தில் மாநில அரசு திருத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் சமர்ப்பித்தது. ஆனால் ஏற்கனவே கூறப்பட்ட பிரச்சினைகள் எதுவும் சரிசெய்யப்படவில்லை என்பதை பதில் கடிதத்தில் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சுட்டிக் காட்டி தெளிவுபடுத்தியது.
மேலும், சராசரி பயண தூரம் சுமார் 15 கிலோமீட்டர் அல்லது அதற்கு மேல் இருக்கும் நகரங்களில்தான் இத்தகைய பெரிய அளவிலான மெட்ரோ முதலீடுகள் நியாயப்படுத்தப்பட முடியும் என்றும் கூறியுள்ளது.
இதன் அடிப்படையில், கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் பேருந்து மையப்படுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து அமைப்புகளை வலுப்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளது. எனவே தற்போதைய தரவுகள் அடிப்படையில் மெட்ரோ திட்டத்திற்கு அனுமதி வழங்க முடியவில்லை என்பதே அதன் நிலைப்பாடு.
இந்த சூழலில், போபால், இந்தூர், பாட்னா, மற்றும் ஆக்ரா போன்ற நகரங்களில் மக்கள் தொகை தரவுகளை சரியாகப் பயன்டுத்தி, மெட்ரோ திட்டங்களுக்கான ஒப்புதலைப் பெற்றன. ஆனால் கோவைக்கான சரியான திட்டமிடலை வெளிப்படுத்தும் வகையில் முறையான அறிக்கை தயாரிக்கப்படவில்லை.
நமது சாலைகளின் உண்மையான அகலத்தை கொண்டு பாதை அமைப்புகள் வடிவமைக்கப்படவில்லை. எந்தப் பொறியாளரும் ஆய்வுக்குழுவின் முன் நியாயப்படுத்த முடியாத யூகங்களின் அடிப்படையில்தான் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. மேலும், நாடாளுமன்றத்திலும் இந்த அறிக்கைகளில் குறிப்பிட்ட தொழில்நுட்ப குறைபாடுகள் இருப்பது பதிவு செய்யப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்டுள்ள மக்கள்தொகை, பயணிகள் பயன்பாடு, பொறியியல் சாத்தியக்கூறு மற்றும் பொருளாதார சாத்தியக்கூறு ஆகிய அளவுகோல்களை பூர்த்தி செய்யும் எந்தப் பொதுப் போக்குவரத்து திட்டத்திற்கும் மத்திய அரசு முழுமையான ஆதரவை வழங்கத் தயாராகவே உள்ளது.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு முந்தைய விரிவான திட்ட அறிக்கைகளில் ஏற்பட்ட தவறுகளைச் சரிசெய்து, விரிவான போக்குவரத்துத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, உள்ளூர் திட்டமிடல் பகுதி மற்றும் நகரக் குழுமம் மக்கள் தொகைத் தரவுகளின் அடிப்படையில் மறுசீரமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
