கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மற்றும் அதனை ஒட்டியுள்ள சுற்றுலா இடங்கள் கோவை மக்களின் பொழுதுபோக்கு தலங்களாக உள்ளன. வெளியூர், அண்டை மாநில சுற்றுலா பயணிகளும் இங்கு அதிகம் வந்து செல்கின்றனர். விடுமுறை, பண்டிகை நாட்களில் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வந்து இங்கு பொழுதைக் கழிப்பார்கள்.
ஆழியாறு அணைக்கரையில் குழந்தைகள் பூங்கா உள்ளது. இந்தப் பூங்கா நீண்ட நாட்களாக பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டது. இதனை புதுப்பிக்க கோரிக்கைகள் எழுந்தன. அந்த வகையில், தற்போது ரூ.40 லட்சம் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுப்பணித் துறையின் நீர்வளப் பிரிவு இரண்டு வாரங்களுக்கு முன்பு பூங்கா புதுப்பிப்பு பணிகளைத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பூங்காவில் உள்ள மான், புலி, சிங்கம், மீன் போன்ற சிலை வடிவங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. களைகள் மற்றும் புதர்கள் சுமார் 60 சதவீதம் அகற்றப்பட்டுள்ளன; மீதமுள்ள பகுதிகள் ஒரு மாதத்திற்குள் சுத்தப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், பூங்காவில் உள்ள அலங்கார அமைப்புகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இரண்டு சுகாதார வளாகங்களும் கட்டப்பட்டு வருகின்றன. அனைத்து பணிகளும் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
