கோவை சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கம் என்பது பல ஆண்டுகளாக கோவையின் தொழில் துறையினர் மற்றும் விமான பயணிகளிடமிருந்து முன்வைக்கப்பட்டு வந்த ஒரு முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது.
கடந்த 2011-2021 அதிமுக ஆட்சியில் இதற்கான அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு அடுத்து 2021-26 அமைந்த திமுக ஆட்சியில் இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் பெரும்பாலும் முடித்து வைக்கப்பட்டது.
விரிவாக்கப்பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்ட 600+ ஏக்கர் நிலத்தை மத்திய அரசின் கீழ் வரக்கூடிய இந்திய விமான நிலைய ஆணையத்தினிடம் ஒப்படைப்பதா? வேண்டாமா? என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் விமான நிலைய விரிவாக்கம் என்பது துவங்காத நிலையில் இருந்தது.
அப்போதைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு பதில் தரும் விதமாக கையகப்படுத்திய நிலத்தை எந்தவித நிபந்தனையும் இன்றி ஆணையத்திடம் ஒப்படைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் கையகப்படுத்தப்பட்ட 600 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்து தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைந்துள்ள நிலையில் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு பயன்படும்படியாக சுமார் 7.5 ஏக்கர் கூடுதல் நிலம் கையகப்படுத்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் புதிதாக அமைய உள்ள விமான நிலையத்தின் முனையத்திலிருந்து எல் & டி பைபாஸ் உடன் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் 200 அடி சாலை ஒன்று இதன் மூலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு மத்தியில் கோவை விமான நிலைய விரிவாக்கத்தின் ஒருபகுதியாக அதன் வடிவமைப்பு தொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கடந்த வியாழன் அன்று ஆய்வு நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


