இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணிகள் இரு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்டமாக, வீட்டுப் பட்டியல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கித் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இக்கணக்கெடுப்பில், ஆகஸ்ட் 17ம் தேதி வரை 61% சதவீத பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 39% சதவீத பணிகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இதுவரை கணக்கெடுப்பாளர்கள் வராத வீடுகள் அல்லது விடுபட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதிக்குரிய மாநகராட்சி மண்டல அலுவலக அதிகாரிகளை மேற்கு மண்டலம் தொலைபேசி எண். 0422 – 2551700, கைபேசி எண். 7395922972, மத்திய மண்டலம் தொலைபேசி எண்.0422 – 4709525, கைபேசி எண். 7871981000, வடக்கு மண்டலம் தொலைபேசி எண்.0422 – 2243133, கைபேசி எண். 9943535360, கிழக்கு மண்டலம் தொலைபேசி எண். 0422 – 2577217, கைபேசி எண். 8925975839, தெற்கு மண்டலம் தொலைபேசி எண். 0422-2252705, கைபேசி எண். 8925975904 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு கணக்கெடுப்பாளர்கள் பகுதிக்கு வரவில்லை என்ற விவரங்களை தெரிவிக்கலாம்.

மேலும், கணக்கெடுப்பு அலுவலர்கள் அனைவரும் மாநகராட்சி வழங்கிய அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை அணிந்திருப்பார்கள். வீட்டின் முகவரி, சுவர்களின் தன்மை, கூரை வகை, குடிநீர் ஆதாரம், கழிப்பறை வசதி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை போன்ற முதற்கட்ட விவரங்கள் மட்டுமே சேகரிக்கப்படும். இத்தகவல்கள் முற்றிலும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். அரசின் நலத்திட்டங்கள் மற்றும் கோவை மாநகர மேம்பாட்டுத் திட்டங்களைச் சரியாகத் திட்டமிடவே இத்தரவுகள் பயன்படும்.

எனவே, பொதுமக்கள், கணக்கெடுப்பு அலுவலர்கள் தங்கள் இல்லங்களுக்கு வரும்போது, அவர்கள் கேட்கும் விவரங்களைச் சரியாக வழங்கி, அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.