ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியானது எஜுகேஷன்வேர்ல்ட் வெளியிட்ட கல்லூரிகளுக்கான தேசியத் தரவரிசைப் பட்டியலில் இந்திய அளவில் 7-வது இடத்தையும் (தமிழ்நாட்டில் 2-வது இடம் மற்றும் கோயம்புத்தூரில் கல்விச் சாதனைக்கான சிறந்த இடம்) மற்றும் தனியார் தன்னாட்சிக் கலை அறிவியல் கல்லூரிகளில் இந்திய அளவில் 10-வது இடத்தையும் பிடித்துச் சாதனை படைத்துள்ளது.

சிறந்த கல்வி மற்றும் கல்லூரியின் பன்முகச் சாதனைகளைப் பாராட்டி புதுதில்லியில் நடத்தப்பட்ட விழாவில் கல்லூரியின் தொடர் சாதனைகளுக்காக விருதுகள் வழங்கப்பட்டன. அமெரிக்காவின் டல்லாஸ் கல்லூரியின் முன்னாள் துணைவேந்தர் ஜோ.டி.மே மற்றும் மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தின் இந்தியச் செயல்பாடுகளுக்கான தலைமை செயல் அதிகாரி  டேவிட் தாஸ் ஆகியோர் இந்த விருதுகளை வழங்கினர்.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் இதுபற்றிக் கூறும்போது, இந்த விருதுகளை, உயர்கல்வியில் சிறந்து விளங்குவதற்கான எங்களது கல்வி நிறுவனத்தின் முழுமையான அர்ப்பணிப்புடன் கூடிய தொடர்முயற்சிகளுக்கான அங்கீகாரமாகக் கருதுகிறோம் என்றார்.

கல்லூரியின் சார்பில் விருதுகளைப் பெற்றுக்கொண்ட கல்லூரி முதல்வர் சித்ரா, இளம்தலைமுறையின் அறிவுசார் திறன்களை வளர்ப்பதிலும், ஆராய்ச்சி மனப்பான்மையோடு கூடிய கற்றலை ஊக்குவிப்பதிலும், கல்வித்துறையில் உலகளாவிய தர அளவுகோல்களுக்கு நிகராகப் பயன் தரும் கல்வியை வழங்குவதிலும் எங்கள் கல்லூரி தொடர்ந்து முயற்சி செய்ய ஊக்கமளிப்பதாக இந்த விருதுகள் அமைகின்றன என்று குறிப்பிட்டார்.