கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தேர்நிலைத் திடல் பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், அம்மன் குளம் கெம்பட்டி காலனி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் யார் என்று எனக்கு நன்றாக தெரியும், அவர்கள் உணர்வுபூர்வமானவர்கள் இந்த தொகுதிகளில் நான் நடந்து செல்லாத வீதி இல்லை என்று சொன்னால் அது மிகை ஆகாது.

20260419 214030

இது என்னுடைய மக்கள். என்னை அழைக்க வந்த பொழுது இது உங்கள் தொகுதி என்று சொல்லும் பெருந்தன்மை செந்தில்பாலாஜிக்கு இருந்தது. அவர் அதனை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் அதனை சொன்னார். நான் அதற்கு பதிலாக இது நம்முடைய தொகுதி என்று செந்தில் பாலாஜியிடம் கூறினேன் என்று தெரிவித்தார்.

ஒரு பைசா கூட வாங்காமல் 51,481 ஓட்டுக்கள் எனக்காக போட்டவர்கள் இந்த மக்கள் என்றும் அந்த ஓட்டுக்கள் இவருக்கு விழும் என்று நான் உறுதியாக சொல்ல முடியும் என்று தெரிவித்தார்.

மேலும் அது அன்பினால் வந்த ஓட்டுகள். நான் என்னுடைய நாடாளுமன்ற நிதியில் இருந்து முதல் கடமையை செய்த இடம் இந்த தெற்கு தொகுதி தான். இங்கு ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் நிதியை எம்பி நிதியிலிருந்து ஒதுக்கி உள்ளேன்.

இங்கு சர்வதேச தரத்திலான ஒரு நீச்சல் குளம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. எப்படி துணை முதல்வர் தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்களை எல்லாம் அகில உலக மேடையில் மிளிர செய்தாரோ அதுபோல் இங்கு கோவையில் இருந்தும் நீச்சல் வீரர்கள் உலக அரங்கில் அரங்கேறுவார்கள் என்று தெரிவித்தார்.

அதற்காக நான் போட்டிருக்கும் அந்த சிறு விதையை திராவிட முன்னேற்றக் கழகம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

எனக்கு இந்த தொகுதியில் அதிக தொடர்புகள் உள்ளது. ஜிடி நாயுடு உருவாக்கிய பேருந்து போக்குவரத்து கழகம் பிற்பாடு தமிழ்நாட்டிற்கு உரிய கழகமாக மாறியது. அதற்கு முதல் அன்பளிப்பு தந்தவர் ஜிடியார் தான், அவருடைய பெயரில் பாலம் கட்டியது மிக நியாயமானது.

மற்ற மாநிலங்கள் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு எதிரியே நமக்கு முதல் இடம் கொடுக்கும் அளவிற்கு திமுகவின் திட்டங்கள் இருப்பதாக சுட்டிக் காட்டிய கமலஹாசன், இதனை நான் கூறவில்லை வடக்கில் இருந்து வந்த டாடா கூறுகிறது என்று தெரிவித்தார்.

20260419 214032

அனைவரும் திமுகவை வீழ்த்துவேன் என்று கூறுகிறார்கள். அவர்கள் முதலில் தேங்காய் உடைப்பது திமுகவின் பெயரை சொல்லி தான். திமுகவை ஒழிப்பேன் என்று கூறுபவர்களுக்கு பின்னால் ஒரு முதலாளி உள்ளார். அவரும் வடக்கில் தான் உள்ளார்.

கோவைக்கு ஏன் மெட்ரோ விடவில்லை என்று கேட்பதற்கு புத்தி உள்ளது என்றும் ஏன் மெட்ரோ விடவில்லை என்று கேட்டால் அதற்கான மக்கள் தொகை குறைவாக உள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் மக்கள் தொகை குறைவாக உள்ள மாநிலத்திற்கு நிதிகளை தளர்த்தி மெட்ரோவை விடுகிறார் என்று தெரிவித்தார்.

எந்த விதத்தில் தென்இந்தியாவின் மான்செஸ்டர் என்று சொல்லப்படும் கோவை குறைந்துவிட்டது. நான் இளைஞராக இருந்த பொழுது இருந்து கோவை விமான நிலையத்தை விரிவு படுத்த வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டு வந்ததாகவும் ஆனால் தற்பொழுது வரை அது செய்யவில்லை. அதனை செய்ய வேண்டிய பொறுப்பு திமுக கையில் இல்லை மத்திய அரசு கையில் தான் உள்ளது.

அதே போன்று உதயநிதி செய்திருக்கும் சாதனைகள் தமிழ்நாடு மட்டுமல்ல உலக அரங்கில் விளையாட்டு வீரர்கள் அதனை சொல்லப் போகிறார்கள் என்று தெரிவித்தார். செந்தில் பாலாஜி கோவையை மாநகராட்சியில் உள்ள நூறு வார்டுகளில் 96 வார்டுகளை வென்று காட்டியவர். அந்த சரித்திரத்தை மீண்டும் அவரால் நிகழ்த்தி காட்ட முடியும்.

செந்தில் பாலாஜி கரூரில் இருந்து கோவைக்கு வந்தது முதலமைச்சர் அவருக்கு கொடுத்த அசைன்மென்ட். தமிழக அரசியல் சரித்திரத்தில் ஒரு புதிய மாற்றத்தை கோயம்புத்தூர் உருவாக்கப் போகிறது. அங்கே ஒரு செயின்ட் ஜார்ஜ் கோட்டை, இங்கே ஒரு கோட்டை என்று மாறப்போகிறது. அதனை முதலில் ஆரம்பிக்கப் போகிறவர் செந்தில் பாலாஜி

மேலும் இது திராவிட முன்னேற்றக் கழக கோட்டையாக மாறப்போகிறது. ஏற்கனவே இங்கு போட்டி போட்டுக் கொண்டிருந்தவர் சற்று மாறி வேறு இடத்திற்கு போட்டி போட சென்றது செந்தில் பாலாஜி வெற்றிக்கான சாட்சி.

கோவையில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்கா, பெரியார் நூலகம், தங்க நகை பூங்கா ஆகியவற்றை மேற்கோள் காட்டி பேசிய அவர், பெரியார் நூலகம் ஒரு கீத்து கொட்டகை போல அல்லாமல் மால் போன்று அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காக கட்டியுள்ளார்கள் என்று தெரிவித்தார். இந்த நூலகம் ஒன்றுக்கும் ஆகாது என்று கூறுபவர்கள் எல்லாம் படித்து முன்னேறி விடக்கூடாது என்று நினைப்பவர்கள் தான் என்று தெரிவித்தார்.

கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்பது கோவையின் பழமொழி. அப்படி என்றால் இங்கு செழிக்கும் என்பதற்கான அனைத்தும் உங்கள் கண்களில் தெரிகிறது என்று வாக்காளர்களை பார்த்து கூறினார்.

ஓட்டு போட்டால் மெட்ரோ கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அதற்கு பேர் வாக்குறுதியா அல்லது பிளாக்மெயிலா என்று கேள்வி எழுப்பிய அவர், அந்த பிளாக் மெயில் எல்லாம் தமிழ்நாட்டில் பலிக்காது என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மிரட்டல் எவ்வாறு இருக்கும் என்பதை நாங்கள் பாராளுமன்றத்தில் செய்து காட்டி விட்டோம். தற்பொழுது உள்ள பாராளுமன்ற எண்ணிக்கையில் 33 சதவிகிதத்தை கொண்டு வர வேண்டும் என்பது என்னுடைய கடமை. அது என்னுடைய வாக்குறுதி. அதற்காக நான் போராடுவேன்.

வடவர் படையெடுப்பை முறியடிப்போம். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு. ஆனால் வாகை சூட வந்தால் பதிலடி கொடுக்கும் தமிழகம். இது நம் அனைவருக்கும் தெரியும். சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதனை 23ஆம் தேதி செய்து காண்பியுங்கள்.

செந்தில் பாலாஜி அனைத்தையும் நிறைவேற்றுவார். நான் அதனை தோலுக்கு பின்னால் நின்று பார்த்துக் கொண்டிருப்பேன். ஒவ்வொரு முறை செந்தில் பாலாஜி அந்த புள்ளியை எட்டும் பொழுதெல்லாம் பாராட்டுவேன். தேவைப்பட்டால் விமர்சிக்கவும் செய்வேன் என்று கூறினார்.

இவர் என்னுடைய சகோதரர். இது என்னுடைய தொகுதி. நாளை நமதாக வேண்டுமென்றால் அரசியல் பற்றுடன் செயல்பட வேண்டும். அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.