கிறிஸ்தவர்களின் உரிமைகளை காக்க அரசுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே ஒர பாலமாக செயல்படுவேன் என கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள ஆலயத்தில், கிறிஸ்தவ நல அமைப்பு சார்பில் அனைத்து கிறிஸ்தவ சபைகளின் ஒருங்கிணைந்த ஜெபக் கூட்டம் நடைபெற்றது. பேராயர் பிரின்ஸ்கால்வின் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சி, ஓர் அணியில்“ஒன்றிணைவோம் – நம் உரிமைகளை மீட்டெடுப்போம்” என்ற தலைப்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், கிறிஸ்தவர்கள் தேவாலயங்கள் கட்டுவதற்கு தேவையான அனுமதிகள் வழங்கப்படும். ஆலயங்கள் கட்டுவதில் உள்ள தடைகள் நீக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். மேலும், கிறிஸ்தவர்களின் நல்லடக்கத்திற்குத் தேவையான கல்லறைகள் ஏற்படுத்தி தரப்படும் எனவும் தெரிவித்தார்.

அரசுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுவேன் என்றும் கூறிய அவர், தமிழ்நாட்டின் சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் அரணாக முதலமைச்சர் உள்ளார் என்றார்.
மேலும், தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான அரசியல் களமாக இந்த தேர்தல் அமைந்துள்ளது. தமிழ்நாடு அணியை வெற்றி பெறச் செய்ய அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
