கோவை மாவட்டம், இக்கரை போளுவாம்பட்டியில், ஈஷா அறக்கட்டளையினால் நிறுவப்பட்ட நவீன எரிவாயு மயானத்தின் செயல்பாட்டிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், “எரிவாயு மயானம் முறையான பஞ்சாயத்து அனுமதியுடன், விதிகளுக்கு உட்பட்டே கட்டப்பட்டுள்ளது, சமூகத்திற்குப்  பயன்படும் எரிவாயு மயானத்தை பொதுநலனுக்கு எதிரானது எனக் கூற முடியாது” எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

ஈஷா யோக மையத்தைச் சுற்றியுள்ள 5-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த மக்கள், அவர்களின் பகுதிக்கு அருகிலேயே ஒரு மயானத்தை அமைத்து தருமாறு அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, ஈஷா அறக்கட்டளை பஞ்சாயத்து அனுமதியுடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட இதர அரசு துறைகளின் ஒப்புதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நவீன எரிவாயு மயானத்தை அமைத்தது.

இதில் ஈஷாவைச் சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த மயானத்தில் எரியூட்டும் சேவைகளை முற்றிலும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஈஷா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சில தனிநபர்கள், ஈஷா சார்பில் கட்டப்பட்ட எரிவாயு மயானத்திற்கு கிராம பஞ்சாயத்து வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரியும், கட்டிமுடிக்கப்பட்ட மயானத்தை அகற்றக் கோரியும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் அடங்கிய அமர்வு, “எரிவாயு மயானம் முறையான பஞ்சாயத்து அனுமதியுடன், விதிகளுக்கு உட்பட்டே கட்டப்பட்டுள்ளது. மேலும் ஒரு மயானம் கட்டப்படுவது அதுவும் எரிவாயு மயானமாக கட்டப்படுவது சமூகத்திற்கு பயன்படும், இதனை பொதுநலனுக்கு எதிரானது என்று கூற முடியாது” எனக் கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.