பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. தற்போது 118.50 அடியாக எட்டியுள்ள நிலையில் இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து ஐந்து வாய்க்கால்கள் வழியாக ஆழியாறு பழைய ஆயக்கட்டில் உள்ள 6,400 ஏக்கர்  விவசாய நிலங்களுக்கு இரண்டாம் போக பாசனத்திற்காக இன்று முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை ஆழியார் அணையில் இருந்து தொடர்ந்து 173 நாட்களுக்கு 1143 மில்லியன் கன அடி நீர் மிகாமல் தண்ணீர் திறந்து விட வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று நீர்வளத்துறை, செயல் பொறியாளர் சிங்காரவேலு, உதவி பொறியாளர் கார்த்திக் கோகுல், அதிகாரிகள் பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் முன்னிலையில் மலர் தூவி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.