மருத்துவத்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை கோவையில் முதன்முறையாக ‘ஹெல்த்கேர் ஐடி’ மாநாட்டை நடத்தியது.

மாநாட்டை கூகுள் நிறுவனத்தின் சிலிக்கான் பிரிவின் மூத்த இயக்குநர் சுபாஷ் சந்தர் கோவிந்தராஜன்,  எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்வில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரிகள் ராம்குமார், மகேஷ்குமார், மருத்துவ இயக்குநர் டாக்டர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டின் தலைமை அமைப்பாளரும், ஐடி பிரிவின் தலைவருமான விஸ்வநாத் தனராஜ் வரவேற்புரையாற்றினார்.

தொழில்நுட்ப வல்லுநர்கள், மருத்துவ நிபுணர்கள் பங்கேற்ற மாநாட்டில், நோயாளிகளுக்கான சிகிச்சையை மேம்படுத்தும் நவீன கருவிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு, தரவு பாதுகாப்பு, டிஜிட்டல் ஸ்கேன் தொழில்நுட்பம், பழைய மென்பொருள் முறைகளில் மாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.

மருத்துவத் துறையில் நிலவும் அதிக பணிச்சுமைக்கு நடுவே, தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் தங்களது வேலை-வாழ்க்கை சமநிலையை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.