ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்ந்துள்ள முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் விழாவிற்குத் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் வரவேற்றுப் பேசினார்.

கோயம்புத்தூர் சென்ட்ரல் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு தடுப்புப்பிரிவு உதவி ஆணையர் மணிமோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது: நாம் உலகில் எங்கு சென்றாலும் நம் எதிர்காலம் மிகவும் முக்கியமானது. நமக்கு அறிவுரை கூறுபவர்களைப் பிடிக்காது. அதைக் கேட்பவர்கள் தான் நன்மை அடைவார்கள். கல்வி இல்லாமல் அடுத்தக் கட்டத்திற்குச் செல்ல முடியாது. கல்வி கற்கும் காலக்கட்டம் முக்கியமானது.

24 மணி நேரத்தில் கல்லூரிக்கு வரும் நேரம், உறங்கும் நேரம் தவிர்த்து, மீதமுள்ள 8 மணி நேரம் முக்கியமானது. இந்த நேரத்தைப் பயன்படுத்துபவர்களே வாழ்க்கையில் வெற்றி பெற இயலும். சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடந்தால் நேரம் வீணாவதுடன், வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடும்.

ஆசிரியர்கள் உங்களுக்குள் அறிவைக் கொளுத்தி விடுவார்கள். மாணவர்கள் தான் கொளுந்து விட்டு எரிய வேண்டும். கற்றுக் கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் மாணவர்களுக்கு உருவாக வேண்டும். எப்போதும் ஒருதுறையைச் சேர்ந்தவர்களாக இருப்பது நன்மை பயக்காது. மற்றொரு துறையில் வாய்ப்புக் கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றார்.