அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா ஜென்னி ரெசிடென்ஸி ஓட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் கோவையின் முழுமைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முன்னோடித் திட்டங்களை நடைமுறைப்படுத்திய தமிழ்நாடு வீட்டுவசதித் துறைக்கு பாராட்டு விழா, சிறந்த ரியல் எஸ்டேட் தொழில்முனைவோருக்கு விருது வழங்கும் விழா, கூட்டமைப்பு புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கை மாநாடு நடைபெற்றன.
இதில் முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி முகமது ஜியாவுதீன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசுகையில்: ரியல் எஸ்டேட் தொழில் தற்போது நல்ல நிலையில் உள்ளது. ஜாதி, மத பேதமின்றி எல்லோரும் ஒரே இடத்தில் வாழும் சூழ்நிலையை ஏற்படுத்தியிருப்பது ரியல் எஸ்டேட் ஆகும். இங்குள்ள கூட்டமைப்பு உறுப்பினர்கள் லயன்ஸ் கிளப்களில் இருந்துகொண்டு பிறருக்கு உதவி வருவது பாராட்டுக்குரியது.
சமூக முன்னேற்றம் என்பது தொழில் துறை, கல்வி என எதுவாக இருந்தாலும், எல்லாவற்றிலும் பெண்கள் எப்போது சம பங்களிப்பு பெறுகிறார்களோ, அப்போதுதான் அந்த நாடு முன்னேற்றம் அடையும் எனப் பேசினார்.
நிகழ்வில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணைய ஆணையாளர் பிரியகுமார், கூட்டமைப்பு நிறுவனர் ஹென்றி, தேசிய செயலாளர் செந்தில்குமார், தேசிய துணை செயலாளர் பாலசண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
