உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஓராண்டுக்குள் 1 லட்சம் பேரை சுயவிருப்பதுடன் உறுப்பு தான பதிவாளர்களாக உருவாக்கும் நோக்கத்தில் கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையம் மற்றும் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு உடன் இணைந்து ‘உறுப்பு தானம் செய்து புது வாழக்கையை பரிசளியுங்கள்’ எனும் திட்டத்தை துவக்கி நடத்தி வருகின்றனர்.
இந்த திட்டத்தை 2024 டிசம்பரில் தமிழக சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் சுந்தர் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எஃப்) பயிற்சி கல்லூரியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் மக்கள் தொடர்பு மேலாளர் பிரகதீஸ்வரன் வழிகாட்டுதலில் நடைபெற்றது. இந்த நிகழ்வை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களை சேர்ந்த 50 என்.எஸ்.எஸ். தன்னார்வலர்கள் ஒருங்கிணைத்தனர். இந்த நிகழ்வில் சி.ஆர்.பி.எஃப். கல்லூரியை சேர்ந்த அதிகாரிகள், பணியாளர்கள் இதில் பெரும் திரளாக கலந்துகொண்டனர். மேலும், இதில் பலரும் உறுப்பு தானம் செய்ய விருப்பம் தெரிவித்து பதிவு செய்தனர். இக்கல்லூரியின் முதல்வர் மற்றும் சி.ஆர்.பி.எஃப் காவல் துறை தலைவர் லங்சின்குப்; தலைமை பயிற்சி அதிகாரி அன்டனி ஜென்சன்; மூத்த மருத்துவ அலுவலர் தீப்தி பூர்லே மற்றும் துணை கமான்டண்ட் ரத்திகா மோகன் ஆகியோர் உடலுறுப்பு தானம் செய்ய விருப்பம் தெரிவித்து பதிவு செய்துகொண்டனர்.
