நேரு கல்வி குழுமம் சார்பில் ‘போதை இல்லா கோவை’ விழிப்புணர்வு மாரத்தான் நேரு விளையாட்டு அரங்கம் முன்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை காவல்துறை, கோயம்புத்தூர் தெற்கு, சட்டம் மற்றும் ஒழுங்கு, இணை ஆணையாளர் கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதுகுறித்து நேரு கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரியும், செயலாளருமான கிருஷ்ணகுமார் கூறியதாவது: மாரத்தானில் கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் என சுமார் 2,300 பேர் கலந்து கொண்டனர். 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 3 கி.மீ போட்டியும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5 கி.மீ என நான்கு பிரிவுகளாக நடைபெற்றது.

n2

ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம் மற்றும் மூன்றாவது பரிசாக ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டது.  போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மெடல், சான்றிதழ், டி-சர்ட் மற்றும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது எனக் கூறினார்.

இணை ஆணையாளர் கார்த்திகேயன் பேசியதாவது: மாணவர்கள் தங்களது கல்லூரி நாட்களில் நல்ல ஒழுக்கம், பழக்க வழக்கத்துடனும் கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். நண்பர்களை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். நண்பர்கள் தீய பழக்கத்திற்கு அடிமையாக நினைக்கும்போது கல்லூரி ஆசிரியர்களிடமோ, பெற்றோர்களுக்கோ தகவல் தந்து அவர்களின் வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும் எனப் பேசினார்.

மாரத்தான் விழாவில் நேரு கல்வி குழுமங்களின் முதல்வர்கள், இயக்குனர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.