மழை இல்லாததால், சிறுவாணி அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இடைவெளியை அதிகரிக்க மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.
மாநகருக்கு தினசரி 308.89 எம்.எல்.டி குடிநீர் தேவைப்படுகிறது. சிறுவாணி, பில்லூர் 1, 2, 3 மற்றும் ஆழியார் திட்டங்கள் மூலம் குடிநீர் தரப்படுகிறது. பருவமழை குறைந்ததால் சிறுவாணி, பில்லூர் அணைகளில் நீரின் இருப்பு குறைந்து வருகிறது. அணைகளில் நீர் குறைந்து வருவதால், குடிநீர் விநியோகம் இடைவெளியை அதிகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் கூறும்போது; 50 அடி நீர்ப்பிடிப்பு அளவுள்ள சிறுவாணியில் தற்போது 29 அடி தான் நீர் உள்ளது. தினசரி 50 – 55 டி.எம்.சி குடிநீர் சப்ளை ஆகிறது. பில்லூர் அணையில் 77 அடி நீர் உள்ளது. ஒரு வாரமாக மழை இல்லை, மாநகர் மட்டுமின்றி பல கிராமங்கள் மற்றும் திருப்பூர் பில்லூர் அணையை நம்பி உள்ளன.
சில இடங்களில் ஆழ்துளை கிணறுகளுக்கான முக்கிய ஆதாரமாக பில்லூர் உள்ளது. அந்தக் கிணறுகள் வறண்டு விட்டன. சிறுவாணியில் தினசரி குடிநீர் விநியோகத்தை 125 எம்.எல்.டி இல் இருந்து 40 எம்.எல்.டி யாக குறைக்க உள்ளோம்.
குடிநீர் விநியோகம் தொடர்பாக கோவை ஆட்சியர், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் ஆகியோருடன் கலந்து பேசி முடிவு செய்வோம், தற்பொழுது சராசரியாக மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த இடைவெளியை 5 நாட்களாக அதிகரிக்கலாமா? என ஆலோசித்து வருவதாக தெரிவித்தனர்.
