கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை பல்வேறு வகையான நோய்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் கே.எம்.சி.ஹெச் “கோவை மாரத்தான் 2025” என்ற பெயரில் சிறப்பு மாரத்தான் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
தொடர்ந்து 29ம் ஆண்டாக குழந்தைகள் இருதய நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மாரத்தான் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி முன்னிலையில், கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கே.எம்.சி.ஹெச் சூலூர் மருத்துவமனையில் துவங்கிய மாரத்தான் அவினாசி ரோடு பிரதான மருத்துவ மையத்தில் நிறைவடைந்தது. மொத்த தூரம் 16 கிமீ. இதில் மருத்துவர்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள், செவிலியர்கள், மாணவர்கள், உட்பட சுமார் 4000 பேர் கலந்துகொண்டனர்.

மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி பேசுகையில், கே.எம்.சி.ஹெச் சார்பாக முதல் மாராத்தான் 1991-ல் நடைபெற்றது. பல்வேறு நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதுபோன்ற மாரத்தான் நடத்துகிறோம். குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய இருதய நோய்கள் முன்கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த வருட நிகழ்ச்சியின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.
செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி கூறுகையில், குழந்தைகள் இருதய நலனைப் பாதுகாப்பதில் கே.எம்.சி.ஹெச் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. சிகிச்சை அளிப்பதோடு மட்டுமன்றி நோய் தடுப்பு மருத்துவத்திலும் அது தொடர்பான கல்வியிலும் நாங்கள் பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம் என்று கூறினார்.

மாராத்தானில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகையும் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

