கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரியின் நிறுவனத் தலைவர் பழனிச்சாமி, துணைத் தலைவர், இந்து முருகேசன், தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி,முதல்வர் ரமேஷ், துணை முதல்வர் மைதிலி, கல்லூரி வேலைவாய்ப்புத்துறை அதிகாரி மஹாலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும்,தனியார் நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி சுவர்ணநிதி ராவ் மற்றும் BOSCH POWER TOOLS-ன் மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி பிரதீப் ராஜாராம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
இந்த கல்வி ஆண்டில் 70க்கும் மேற்பட்ட சாப்ட்வேர் நிறுவனங்கள், 100க்கும் மேற்பட்ட பொறியியல் தொழில் நிறுவனங்கள் கல்லூரி வளாகத்திற்கு வருகை புரிந்து 1036 பணி நியமன ஆணைகளை மாணவர்களுக்கு வழங்கினர். அதிகபட்ச சம்பள தொகுப்பாக ஆண்டுக்கு ரூ.40 லட்சம், சராசரி சம்பள தொகுப்பாக ரூ.6 லட்சம் அளவுகளில் மாணவர்கள் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர்.
சிறப்பு விருந்தினர் சுவர்ணநிதி ராவ் பேசுகையில், மாணவர்கள் பணி வாய்ப்பு பெற்றதும் கற்பதை நிறுத்தி விடாமல் தொடர்ந்து தங்களது துறையில் வளர்ந்துவரும் புதிய தொழில்நுட்பங்களை ஆர்வமுடன் கற்றுக்கொள்வதை பழக்கமாக்கி கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினார். சிறப்பு விருந்தினர் பிரதீப் ராஜாராம் தனது வாழ்த்துரையில், பொறியியல் துறையில் உள்ள சவால்கள் மற்றும் உலகளாவிய தொழில்வளர்ச்சிகளை பற்றி தெரிந்து கொள்வதுடன், வேலைவாய்ப்பில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு உள்ள சம வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டு சமுதாயத்தில் சிறந்த பொறியியல் வல்லுனர்களாக திகழ வேண்டும் என்று அறிவுறுத்தினார்.