கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மலேசியாவில் உள்ள இண்டி சர்வதேச பல்கலைக்கழகம், தாய்லாந்தில் உள்ள ஷினவத்ரா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்திய, “கணிப்பொறி நுண்ணறிவும் பல்துறை பயன்பாட்டு ஆய்வுகளில் இடைச்செருக்குகளும்” என்ற தலைப்பில் சர்வதேச அளவிலான கருத்தரங்கம், மலேசியாவில் உள்ள இண்டி சர்வதேச பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

ராமகிருஷ்ணா கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், இண்டி பல்கலைக்கழக இணை துணைவேந்தர் வாங் லிங் ஷிங், ஷினவத்ரா பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் சௌ ஃபெய் ஆகியோர் தலைமை வகித்தனர்.

கருத்தரங்கில், “பல்துறை ஆராய்ச்சிகள், புதுமைகள் மற்றும் ஒருங்கிணைப்பு, அறிவியல் மற்றும் கலைப்பிரிவு, இயற்கை மற்றும் உடற்கல்வி அறிவியல், பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் ஆரோக்கியம், வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல், உளவியல், மேலாண்மை மற்றும் சந்தையியல், கல்வி அறிவியல், மொழி மற்றும் இலக்கியம், கணிதம், வேதியியல், உயிரியல்” ஆகிய தலைப்புகளில் 80 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

ஆய்வு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு கருத்தரங்கில் வெளியிடப்பட்டது. இந்தியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தனர்.