கோடை சீசனை முன்னிட்டு ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் செல்கின்றனர். பள்ளிகள் விடுமுறை என்பதாலும், கோடை வெயில் சுட்டெரிப்பதாலும் ஊட்டிப் போன்ற குளிர்ந்த வானிலை கொண்ட இடங்களுக்கு மக்கள் செல்ல விரும்புகின்றனர். அந்த வகையில் ஊட்டிக்கு செல்லச் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டு கோடை விழாவில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 127வது மலர் கண்காட்சி முன்னதாக மே 16 முதல் 21ம் தேதிவரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
தற்போது நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளதால் வாகன கட்டுப்பாடு உள்ளது. ஊட்டிக்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தந்தவண்ணம் உள்ளனர். இந்த நிலையில் மலர் கண்காட்சி தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மே 15ம் தேதி தொடங்கி 25ம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சி மொத்தம் 10 நாட்கள் நடக்கும். மேலும் நீலகிரிக்கு 12 மீட்டர் நீளம் கொண்ட வாகனங்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்கள், சிலிண்டர் ஆகியவற்றை எடுத்து வரக் கூடாது என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவுறுத்தியுளார்.