வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வளைகுடா நாடுகளில் தற்பொழுது நடந்து வரும் போர்ப்பதற்றம் காரணமாக வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ஹோட்டல்கள், பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன. சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக, பல்வேறு உணவகங்களும் உணவு வகைகளை குறைத்துள்ளன. வீட்டில் உபயோகிக்கும் கேஸ் சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பேக்கரி மற்றும் ஓட்டல் தொழிலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வர்த்தகர்கள் கிளை சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போர்க்கால நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் பிரதமர் மோடி அமெரிக்க ஏகாதியபத்தியத்திற்கு அடிபணிய கூடாது எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் வணிக கேஸ் சிலிண்டர் ஒன்றை மத்தியில் வைத்து அதற்கு இறுதி சடங்கு நடத்துவது போன்று மாலை அணிவித்து பிரதமர் மோடியின் கேலிச்சித்திர பதாகைகளை வைத்து அவர்களது கோரிக்கைகளையும் கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.
இதுகுறித்து பேட்டியளித்த இந்த அமைப்பின் பொருளாளர் பத்மநாபன், அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து இறையாண்மை மிக்க ஈரான் நாட்டின் மீது கொடுமையான போரை தொடுத்து வருகிறது. இந்தியாவை பாதுகாக்க வேண்டும் என்று சொன்னால் மிக அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான எரிவாயுவை இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இந்திய நாட்டை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாமல் மத்திய அமைச்சர்கள் வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு இல்லை என்று பொய் கூறுகிறார்கள்.

இந்த தொழிலை நம்பி உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களும், அவர்களது குடும்பங்களும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளவர்கள். ஒன்றிய அரசு அனைத்து பொய் வாக்குறுதிகளையும் நிறுத்திவிட்டு உடனடியாக சிலிண்டர்களை கொள்முதல் செய்து நாடு முழுவதும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
