பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவை- சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோவையில் இருந்து வரும் 11, 18ம் தேதிகளில் (ஞாயிறு) இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06034) மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்னை செல்லும்.
மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து ஜனவரி 12, 19ம் தேதிகளில் இரவு 11.25 மணிக்கு புறப்படும் ரயில் (எண்:06033) மறுநாள் காலை 9 மணிக்கு கோவை வந்தடையும். இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார் பேட்டை, காட்பாடி, அரக் கோணம், திருவள்ளூர், பெரம்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
போத்தனூர் – சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. போத்தனூரில் இருந்து 13, 20ம் தேதிகளில் இரவு 12.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06024) மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை செல்லும்.
சென்னையில் இருந்து ஜனவரி 14, 21ம் தேதிகளில் பிற்பகல் 1.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06023) இரவு 11.15 மணிக்கு போத்தனூர் வரும். இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக் கோணம், திருவள்ளூர், பெரம்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை- போத்தனூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் (எண்: 06026) செங்கோட்டையில் இருந்து 14ம் தேதி இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 7.30 மணிக்கு போத்தனூர் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
