ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 2. O ‘ எனும் மாபெரும் கருத்தரங்கம், சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில், ‘மண் காப்போம் இயக்கத்தின்’ ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா மற்றும் எஸ்.ஆர்.எம் வேளாண் அறிவியல் கல்லூரியின் முதல்வர் ஜவஹர்லால் ஆகியோர் பங்கேற்று கருத்தரங்கம் குறித்து பேசினர்.
சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில்: ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் கடந்த பல ஆண்டுகளாக, இயற்கை விவசாயம் குறித்த பல்வேறு கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. நம் நாட்டின் மொத்த ஜிடிபி உற்பத்தில் 30 முதல் 40 சதவீதம் வரை சிறு குறு நிறுவனங்களில் இருந்து தான் வருகிறது. இதில் விவசாயம் சார்ந்த தொழில்களும் முக்கியமான இடம் வகிக்கிறது. இதற்கான எதிர்காலமும் மிகவும் பிரகாசமாக இருக்கிறது. இதனால் தான் ஈஷா மண் காப்போம் இயக்கம் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழாவை நடத்துகிறது.
இந்தாண்டு எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 2.O நடத்தப்படுகிறது. இதில் மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சருமான சிவராஜ் சிங் சவுகான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கினை தொடங்கி வைக்க உள்ளார். எஸ் ஆர் எம் கல்விக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் பாரிவேந்தர் தலைமையுரை ஆற்ற உள்ளார்.

கருத்தரங்கில் எவ்வாறு விவசாயம் சார்ந்த தொழில் துவங்குவது, அதன் வளர்ச்சிக்கு உதவும் எம்.எஸ்.எம்.இ திட்டங்கள், பிராண்டிங் மற்றும் பேக்கிங் செய்வது குறித்த யுக்திகள், சந்தைப்படுத்துவதில் சமூக வலைதளங்களை முறையாக பயன்படுத்திக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து துறைசார் வல்லுநர்கள் அனுபவங்களையும், முக்கியத் தகவல்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
நிகழ்ச்சி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. பங்கேற்க விரும்புவோர் 83000 93777 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
