உலகம் முழுவதும் புகைப்பட கலைஞர்கள் தங்களின் சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்தி வருகின்றனர். இந்த நிலை உள்ளூரிலும் இது தொடர வாய்ப்புள்ளது. இதன் காரணத்தால் வரக்கூடிய நாட்களில் தனியார் நிகழ்வுகளிலும், சிறப்பு நிகழ்ச்சிகளிலும் புகைப்பட கலைஞர்கள் தங்களுக்கென நிர்ணயிக்கும் கட்டணத்தை உயர்த்தலாம்
கட்டண நிர்ணயம் – வழக்கம் என்ன?
வழக்கமாக புகைப்பட நிபுணர்கள், தாங்கள் ஒரு நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு செல்ல நேரிடும் பயணச் செலவுகள், புகைப்படம் எடுக்கும்போது கூடுதலாக தேவைப்படும் கருவிகள், வாடிக்கையாளரின் தனிப்பட்ட புகைப்பட தேவைகள், படங்களை எடுத்தபின்னர் அதை எடிட் செய்ய பயன்படுத்தும் போட்டோ ஷாப் போன்ற கணினி மென்பொருள் மற்றும் தங்களின் திறமை/அனுபவம் ஆகியவற்றை கொண்டு தங்களின் பணிக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்வார்கள்.
எதனால் இப்போது உயருகிறது?
வழக்கமான ஸ்மார்ட் போன், கெட்ஜெட் பயன்பாட்டாளர்களை தாண்டி புகைப்பட நிபுணர்கள்/ கலைஞர்கள் மெமரி கார்ட், ஹார்ட் டிஸ்க் போன்ற டேட்டா சேமிப்பு சாதனங்களை அதிக அளவில் பயன்படுத்துவார்கள்.

புகைப்பட நிபுணர்கள் தாங்கள் எடுக்கும் புகைப்படங்களை, எடுத்தவுடன் அப்படியே வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது கிடையாது. ஒரு நிகழ்வின் மதிப்பில்லா மனித உணர்வை தங்களது பல மணி நேர உழைப்பை கொண்டு கலைநயத்துடன் காட்சிப்படுத்துகின்றனர். அதற்கு அதை மெமரி கார்ட், ஹார்ட் டிஸ்க்களில் வைத்து நேரம் எடுத்து செதுக்குவார்கள்.
ஒரே ஒரு புகைப்படத்தின் அளவு மட்டும் 12 முதல் 35 எம்.பி. வரையும் கூட இருக்கும். வீடியோ ஒன்றை 4K தரத்தில் எடுத்தால் குறைந்தது 4 நிமிடம் எடுத்தாலே 1.4 ஜி.பி. இருக்கும். ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு புகைப்படம் எடுக்க சென்றாலே ஒரு புகைப்பட நிபுணர் குறைந்தது 500 புகைப்படங்களை எடுப்பார்.

அதுவே திருமண நிகழ்வில் இது 1200-1500 வரை குறைந்தபட்சம் இருக்கும். எனவே எத்தனை மெமரி கார்ட், ஹார்ட் டிஸ்க் இருந்தாலும் அவர்களுக்கு பத்தாது என்று தான் சொல்லவேண்டும்.
அவர்களும் தங்கள் தேவைக்கேற்ப இந்த மெமரி கார்ட், ஹார்ட் டிஸ்க்குகளை அதிகம் வாங்கி வைத்துக்கொள்வார்கள். ஆனால் இப்போது இந்த சாதனங்கள் 3 மடங்கு விலை உயர்ந்துள்ளன. இதனால், புகைப்பட நிபுணர்களும் தாக்கம் அடைந்துள்ளனர்.
ஏன்? எப்படி?
செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனங்களுக்கான டேட்டா சென்டர்களில் தற்போது அதிவேக மற்றும் மிக அதிக செயல்திறன் கொண்ட பிரத்யேக ரேம் (RAM) தொழில்நுட்பங்கள் தேவைப்படுவதால் இன்று ஸ்மார்ட்போன்களுக்கான ரேம்-களை தாண்டி, வழக்கமான மெமரி கார்ட், ஹார்ட் டிஸ்க்களின் விலையும் உயர்ந்துவருகிறது. இதனால் தாக்கத்திற்குள்ளாகும் புகைப்படத்துறையை சேர்ந்தவர்கள் தங்களின் கட்டணத்தை உயர்த்தி வருகின்றனர்.

இந்தக் கட்டண உயர்வு, அவர்களை தங்கள் தொழிலில் தொடர்ந்து தேவையான சாதனங்களுக்கான முதலீடு செய்யவும், வாடிக்கையாளர்கள் விரும்பும் தரமான புகைப்படங்களை தொடர்ந்து வழங்கவும், தங்களின் படைப்புக்களை உலகத்திற்கு காட்டவும் உதவும் என கருதுகின்றனர்.
