கோவையில் நிலைத்தன்மை மற்றும் ஆற்றல் பயிற்சியாளர்கள் சங்கம் சார்பில் ‘நிலையான பாரதம்’ மாநாட்டின் 6-வது பதிப்பு கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் சங்கத்தின் தலைவர் ரகுராம், தேசிய சூரிய ஆற்றல் நிறுவனத்தின் பிரதிநிதி முஹம்மது ரியாஸ் மற்றும் ஆதார் பூனாவா, சுத்தமான நகர அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணன் கோமந்தூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சங்கத்தின் தலைவர் ரகுராம் கூறியதாவது: 2012 முதல் சூரிய ஆற்றல் உற்பத்தியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விட கூடுதல் வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. தற்போது, சூரிய ஆற்றலை பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பதே முதன்மை இலக்காகும்.
வர்த்தக மற்றும் தொழிற்துறை நிறுவனங்கள் தங்களது கூரைமேல் அமைக்கப்பட்ட சூரிய ஒளி மின் அமைப்புகளுடன் பேட்டரி சேமிப்பை இணைப்பதன் மூலம், அதிக தேவை உள்ள நேரங்களில் மின் நுகர்வைக் குறைத்து மின்சாரச் செலவைச் சேமிக்க முடியும். அரசு திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 37 கிராமங்களை ‘சூரிய மின்சார கிராமங்களாக’ மாற்ற அடையாளம் காணப்பட்டுள்ளன.
மாணவர்களை நேரடியாகத் தொழிற்துறையோடு இணைக்கும் வகையில் இந்தியாவில் முதன்முறையாக ‘மாணவர் மன்றம்’ தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொறியியல் மாணவர்கள் தொழில்துறை தரவுகளைப் பயன்படுத்தி ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடவும், சர்வதேச திட்டங்களில் பங்கேற்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கோவையைத் தொடர்ந்து, இந்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சிக் கருத்தரங்குகள் அடுத்து புனே, பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன.
