தமிழக மாநிலம் முழுவதும், ஆன்லைன் முறையில் வருகையில்லா பத்திரப்பதிவு திட்டம் இன்று நடைமுறைக்கு வந்தது. ஆனால் அதற்கேற்ப சர்வர் திறன் அதிகரிக்கப்படாததால் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.
மாநிலம் முழுவதும் பத்திரப்பதிவு பணிகள் மற்றும் டோக்கன் வழங்கும் சேவைகள் தற்காலிகமாக முடங்கும் நிலைக்கு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சமீபத்தில் பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்டார் 3.0 (STAR 3.0) எனும் மென்பொருள் மேம்பாடு மற்றும் அவசரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக சர்வர் வேகம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், மொத்தமாக 19 சார்பதிவாளர் அலுவலகங்கள் அமைந்துள்ளது. இங்குள்ள 10 அலுவலகங்களில் மட்டும் 50 ஆவணங்கள் மட்டுமே பதிவாகி உள்ளது. சர்வர் தாமதம் காரணமாக பாக்கி ஆவணங்கள் அடுத்த நாளைக்கு ஒத்திவைக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே முன்பதிவு செய்து டோக்கன் பெற்று நேரில் வந்தவர்களுக்கு, ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோவை மதுக்கரை பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரபதிவுக்காக வந்திருந்த பொதுமக்களிடம் கேள்வி எழுப்பிய பொழுது அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில், ‘ஸ்டார் 3.0 வருகையில்லா ஆவணப்பதிவுத்திட்டத்தில் உள்ள சில குறைகளை, நிவர்த்தி செய்ய வேண்டும். சர்வரின் திறனை அதிகரிக்க வேண்டும். மோசடிக்கு வழிவகுக்கும் சில காரணிகளை மாற்றியமைத்தால்தான் இத்திட்டம் வெற்றி பெறும் என்றனர்.
மேலும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அரசின் இனையதள சேவை மிகவும் குறைந்த நிலையில் உள்ளதால் முகப்பு பக்கங்களை கூட திறக்க முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். காலையில் இருந்து இதுவரை 3 பத்திரங்களே பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
வருகையில்லா ஆவணப்பதிவு ஸ்டார் 3.0 திட்டம் அறிமுகமான முதல் நாளே சர்வர் தொய்வடைந்ததால், சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டதுடன் தற்போதைய நிலையைச் சரிபார்க்கவும் சர்வர் கோளாறு சரிசெய்யப்படும் வரை வழக்கமான வில்லங்கச் சான்றிதழ் என்றழைக்கப்படும் (EC) தேடுதல், புதிய ஆவணப் பதிவுக்கான முன்பதிவு போன்ற சேவைகளைச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
